குட் நியூஸ்..! வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை, பட்டா வழங்கப்படும் - அமைச்சர் பெரியசாமி வாக்குறுதி..!
“உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதன்பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும், கட்சி, இனம், மதம் பாகுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை வீடு தேடிச் சென்றடையச் செய்யும் வகையில், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என கூறினார்.
மேலும், முதலமைச்சர் தேர்தல் சமயத்தில் சொன்னபடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 1.16 கோடி மகளிர் மாதம் ரூ.1000 பெற்று பயனடைந்து வருகின்றனர். இன்றைய தினம் புதுச்சத்திரம், பித்தளப்பட்டி, வக்கம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தற்போது நடைபெறும் முகாம்களில் பெறப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான அனைவருக்கும் வீடு தேடி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் பெரியசாமி உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் பெரியசாமி, 60 வயது கடந்த அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்கச் செய்வதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதியாக உள்ளார்.வீடு இல்லாதவர்களுக்கு இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கி அவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும் என வாக்குறுதி கொடுத்தார்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கணவனை இழந்தவர்கள், உதவித்தொகை பெறாதவர்கள், சாலை வசதி, தெரு விளக்கு வசதி, குளத்தை தூர்வாரும் பணிகள், வாய்க்கால் உருவாக்குதல் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறிய அவர், அரசு பள்ளியில் படித்து கல்லூரி மேல் படிப்பிற்கு சென்றால் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் மற்றும் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் ஆகிய திட்டங்களின் கீழ் சுமார் 18 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர் என கூறினார்.
இறுதியாக, 10 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 2 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் மற்றும் பித்தளைப்பட்டி ஊராட்சியில் 3 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 4 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை ஆகிய நலத்திட்ட உதவிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி வழங்கினார்.