1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி இந்த மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியுடன் மதிய உணவும் வழங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு ..!

1

தமிழக சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகளில் கூறியிருப்பதாவது:- ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் பயன்பெறும் 17 ஆயிரம் கோவில்களுக்கு வைப்புத் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தி அளிக்கப்படும். இதற்காக ரூ.85 கோடி அரசு நிதியாக அளிக்கப்படும். இந்த திட்டத்தில் நிகழாண்டு ஆயிரம் நிதி வசதியற்ற கோவில்களும் இணைக்கப்படும். அத்தகைய கோவில்களில் உள்ள அர்ச்சகர்களுக்கு மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

ஆறு கோவில்களில் பக்தர்களுக்கான ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏதுவாக பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு ரூ.177.10 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும். நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் நிகழாண்டில் அழகர்கோவில், மருதமலை முருகன் கோவிலுக்கு விரிவுபடுத்தப்படும். 

பழனியில் உள்ள முருகன் கோவில் சார்பாக நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியுடன் இனி மதிய உணவும் வழங்கப்படும். நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் ஐந்து கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும். அதன்படி, கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில், சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி கோவில், குலசை முத்தாரம்மன் கோவில், கும்பகோணம் உப்பிலியப்பன் கோவில், திருச்சி தாயுமானசுவாமி கோவில்களில் நாள் முழுவதும் பிரசாதம் அளிக்கப்படும்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார், சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி, கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் கோவில்களின் கோபுரங்கள், விமானங்கள் இரவு நேரங்களில் ஒளிரும் வகையில் ஒளிரூட்டப்படும். 19 கோவில்களில் புதிய ராஜகோபுரங்களும், 17 கோவில்களில் புதிதாக திருமண மண்டபங்களும், 23 கோவில்களில் புதிய வணிக வளாகங்களும், 35 கோவில்களில் அடிப்படை வசதிகளும், 12 கோவில்களில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் குடியிருப்புகளும் ஏற்படுத்தப்படும்.

பக்தர்களின் வசதிக்காக, பழனி, திருவண்ணாமலையில் புதிதாக தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் ரூ.23 கோடியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். திருவாரூர் தியாகராஜ சுவாமி, திருவாலங்காடு ஆலாங்காட்டு ஈசுவரர் கோவில்களில் மகா சிவராத்திரி விழா நடத்தப்படும். 50 கோவில்களில் 100 இசை கலைஞர்கள் தொகுப்பூதியத்தில் விரைவில் நியமிக்கப்படுவர். பழனி, சென்னை மயிலாப்பூர் கோவில்களில் ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்படும். இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறி உள்ளார்.

Trending News

Latest News

You May Like