குட் நியூஸ்..! இசைஞானி இளையராஜா கச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச டிக்கெட்!

மே 1ஆம் தேதி கரூர் அருகே கோடங்கிபட்டியில் "ராஜாவின் இசை ராஜாங்கம்" என்ற நிகழ்ச்சி நடக்கிறது. இசைஞானி இளையராஜா கரூரில் முதல் முறையாக நேரடி இசை நிகழ்ச்சி நடத்துகிறார். சிம்பொனியை முடித்த பிறகு இளையராஜா பங்கேற்கும் முதல் நேரடி இசை நிகழ்ச்சி இதுவாகும்.
கரூர் தேசிய நெடுஞ்சாலை கோடங்கிபட்டி அருகே 25 ஏக்கரில் பிரம்மாண்டமான அரங்கம் தயாராகி வருகிறது. சுமார் 35,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி உள்ளது. இந்த இசை நிகழ்ச்சியில் பின்னணி பாடகர்கள் மனோ, ஸ்வேதா மோகன் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர். மேலும் 100 இன்னிசை குழுவினரும் பங்கேற்க உள்ளனர்.
டிக்கெட் விற்பனை ஆன்லைனில் நடைபெறுகிறது. டிக்கெட் விலை 500 ரூபாய் முதல் தொடங்குகிறது.
இளையராஜா பாடல்களை மக்களிடம் கொண்டு சேர்த்த ஓட்டுனர்களுக்கு டிக்கெட்டில் சலுகை வழங்கப்பட உள்ளது பேருந்து, ஆட்டோ, கால் டாக்ஸி, லாரி ஓட்டுநர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு டிக்கெட்டில் சலுகை உண்டு. அவர்களுக்கு 250 ரூபாய்க்கு டிக்கெட் கிடைக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்படுகிறது.
இசைஞானி இளையராஜா சிம்பொனியை முடித்துவிட்டு கரூரில் முதல் முறையாக இசை நிகழ்ச்சி நடத்துவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி கரூர் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.