குட் நியூஸ்..! நாளை முதல் அயோத்திக்கு ஹெலிகாப்டர் சேவை..! ஒரு பக்தருக்கு 3,539 ரூபாய் கட்டணம்..!
![111](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/48df200a6c39dd78a85092e7b98e77bd.jpg?width=836&height=470&resizemode=4)
அயோத்தி நகருக்கு ரயில் சேவை, விமான சேவை போன்றவையும் தொடங்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக பணிகளையும் பாதுகாப்பு பணிகளையும் பார்த்து செய்து வருகிறார். குஜராத் மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 108 அடி உயர ஊதுபத்தி அயோத்தியில் ஏற்றப்பட்டுள்ளது.
இதனால் அந்த பகுதி முழுவதும் நறுமணம் வீசி வருகிறது. இதேபோல் விஐபிக்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணிகளும், பக்தர்களுக்கு பரிசு பொருட்களை கொடுக்கும் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இந்நிலையில் அயோத்திக்கு ஹெலிகாப்டர் சேவையை தொடங்க உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி லக்னோ, கோரக்பூர், பிரயாக்ராஜ், வாரணாசி, ஆக்ரா மற்றும் மதுரா ஆகிய இடங்களில் இருந்து அயோத்திக்கு ஹெலிகாப்டர் சேவையை வழங்க உத்தரப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
ஜனவரி 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை லக்னோவில் இருந்து ஹெலிகாப்டர் சேவையை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைக்கிறார். ஹெலிகாப்டர் சேவைகளுக்கான கட்டணத்தையும் அரசு நிர்ணயித்துள்ளது. மேலும் இந்த ஹெலிகாப்டர் சேவையை எதிர்காலத்தில் மாநிலத்தின் பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்துவதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.
மேலும் அயோத்தி நகரம் மற்றும் ராமர் கோயிலின் வான்வழி தரிசனத்தையும் பக்தர்களுக்காக உத்தரப்பிரதேச மாநில அரசு அறிமுகப்படுத்துகிறது. இதற்கான பொறுப்பு சுற்றுலா துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வான்வழி தரிசனத்தில் ஆர்வமுள்ள பக்தர்கள் இந்த வசதியைப் பெற முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராம் மந்தீர், ஹனுமன்கர்ஹி மற்றும் சரயு கட் உள்ளிட்ட புகழ்பெற்ற சுற்றுலா தலங்களை உள்ளடக்கிய வான்வழி பயணத்தை பக்தர்கள் பெற முடியும். இந்த விமானப் பயணத்தின் காலம் அதிகபட்சமாக 15 நிமிடங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வான்வழி தரிசனத்திற்கு ஒரு பக்தருக்கு 3,539 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.