குட் நியூஸ்..! இனி சாலை விபத்தில் காயமடைந்தால் இனி இலவச சிகிச்சை: மத்திய அரசு

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இது தொடர்பான அரசாணையை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அரசாணைப்படி, சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு இலவச சிகிச்சை -2025ஆம் திட்டம் 2025ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
நாடு முழுவதும் சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும் வகையில் மத்திய அரசு இந்த திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அந்த அரசாணையில், சாலைகளில் மோட்டார் வாகனங்களால் ஏற்பட்ட விபத்துகளில் காயமடையும் எந்தவொரு நபரும், எந்தவொரு சாலையாக இருந்தாலும், இந்த திட்டத்தின் கீழ், மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுகாதார ஆணையமானது மாநில காவல்துறை, மருத்துவமனைகள் மற்றும் மாநில சுகாதார நிறுவனங்கள் போன்றவற்றுடன் ஒருங்கிணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் அமைப்பாக இருக்கும். "விபத்து நடந்த நாளிலிருந்து அதிகபட்சமாக ஏழு நாள்களுக்கு, பாதிக்கப்பட்டவர், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வரையிலான தொகைக்கு எந்தவொரு நியமிக்கப்பட்ட மருத்துவமனையிலும் பணமில்லா சிகிச்சையைப் பெற உரிமை உண்டு" என்று அரசாணை கூறுகிறது.
மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, மாநில சாலைப் பாதுகாப்பு கவுன்சில், அந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில், திட்டத்தை செயல்படுத்துவதற்கான நோடல் அமைப்பாக செயல்படும். அதுமட்டுமல்லாமல், நியமிக்கப்பட்ட மருத்துவமனைகளில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்படுவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தல், நியமிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சிகிச்சை மற்றும் தொடர்புடைய விவகாரங்களில் பணம் செலுத்துதல் ஆகியவற்றிற்கான மைய தளமாகவும், ஏற்றுக்கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தேசிய சுகாதார ஆணையத்துடன் ஒருங்கிணைப்பதற்கும் பொறுப்பேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதை கண்காணிக்க சாலைப் போக்குவரத்துத் துறை செயலாளரின் கீழ் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவில் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கூடுதல் செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.