குட் நியூஸ்..! துணைத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டண சலுகை..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/f54eb03e4707244116954cc9b2d5da81.jpg?width=836&height=470&resizemode=4)
தமிழக அரசின் பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தற்போது பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாகும். இந்நிலையில் பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு உடனே துணைத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு தேர்வில் தோல்வி அடையும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவ மாணவிகளுக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, SSLC, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வியுறும் மாணவர்களுக்கு, ஜூன், ஜூலை மாதங்களில் உடனடி தேர்வு நடத்தப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் விண்ணப்பிக்க தவறும் மாணவர்களுக்கு, கடைசி வாய்ப்பாக தக்கல் திட்டத்தின் கீழ் உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தட்கல் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கடைசி நேரத்தில் விண்ணப்பிப்பதால் ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
இந்த நிலையில், மாணவர்களுக்கு ஏற்படும் நிதி சுமையை கருத்தில் கொண்டு, தக்கல் திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு கட்டணம் கிடையாது என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தக்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான கால அவகாசம் 7 நாட்களில் இருந்து 15 நாட்களாக அதிகரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், ஏராளமான அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பயன் பெறுவர் எனவும் தெரிவித்துள்ளார்.