குட் நியூஸ்..! இனி மின்சார வாகனத்தை ரயில் நிலையங்களில் சார்ஜ் செய்யலாம்..!

மின்சார வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. மின்சார வாகனங்களுக்கு எளிதில் சார்ஜிங் வசதி கிடைக்க தேசிய நெடுஞ்சாலையில் ஒவ்வொரு 25 கி.மீ தூரத்துக்கும், நகரங்களில் ஒவ்வொரு 3 கி.மீ. தூரத்துக்கும் ஒரு சார்ஜிங் மையங்களை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.
கேரளாவில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அதிக அளவு இருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலும் அதிக அளவில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், சென்னையில் ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் மையம் அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. சென்னை கடற்கரை வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் முதற்கட்டமாக மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் செய்யும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் இன்னும் சில நாட்களில் முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கபப்பட உள்ளன. சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தில் மொத்தம் 14 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்கள் அனைத்திலும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையம் அமைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதனால் சென்னையில் வாகன ஓட்டிகள் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையத்தை தேடி ஓட வேண்டிய நிலை இல்லை. தங்கள் மின்சார கார் மற்றும் மின்சார பைக்குகளை ரயில் நிலையங்களிலேயே சார்ஜ் செய்து கொள்ளலாம்.