குட் நியூஸ்..! இனி ஏ.டி.எம்.களில் ரூ.100, 200 நோட்டுகள் கட்டாயம் இருக்க வேண்டும்..!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தந்துள்ள தகவலின் படி, இனி அனைத்து வங்கிகள் மற்றும் White Label ATM Operators (WLAO) ATM-களில் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் கிடைக்கும். WLAO என்பது வங்கி அல்லாத நிறுவனங்களால் இயக்கப்படும் ஏடிஎம்கள் ஆகும். மக்கள் ஏடிஎம்களில் இருந்து சிறிய மதிப்புள்ள (100 மற்றும் 200 ரூபாய்) நோட்டுகளை எளிதாகப் பெறுவதற்காக ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்து இரண்டு கால வரம்புகளை நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த முதல் காலக்கெடுவானது செப்டம்பர் 30, 2025 ஆகும், இந்த தேதிக்குள் 75% ஏடிஎம்கள் ரூ.100 அல்லது ரூ.200 நோட்டுகளை விநியோகிக்க வேண்டும். இது தவிர, இந்த எண்ணிக்கை மார்ச் 31, 2026க்குள் 90% ஐ எட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. சிறிய பரிவர்த்தனைகளுக்குத் தேவையான ரூபாய் நோட்டுகளை மக்கள் எளிதாகப் பெறுவதற்காக இந்த நடவடிக்கை ரிசர்வ் வங்கியால் எடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஏடிஎம்களில் ரூ.500 நோட்டுகள் விநியோகிக்கப்படுவதாக மக்கள் தொடர்ந்து புகார் வைத்து வருகின்றனர். இதனால் சிறிய பரிவர்த்தனைகள் செய்வதில் மக்களுக்கு சிரமங்களை சந்திக்கின்றனர். ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களுக்குப் பிறகு, குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளின் கிடைக்கும் தன்மை அதிகரிக்கும், இது அன்றாட பரிவர்த்தனைகளை எளிதாக்க உதவும்.
இதனிடையே ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஏடிஎம் பரிமாற்றக் கட்டணத்தை ஏடிஎம் நெட்வொர்க் முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி நிதி பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்றக் கட்டணம் ரூ.17ல் இருந்து ரூ.19 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நிதி அல்லாத கொடுப்பனவுகளுக்கு, இந்தக் கட்டணம் ரூ.7 ஆக இருக்கும். இந்தப் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் ஜிஎஸ்டி பொருந்தும். வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி ஏடிஎம்மில் இருந்து ஒவ்வொரு மாதமும் 5 இலவச பரிவர்த்தனைகளின் வசதியைப் பெறுவார்கள், இதில் நிதி மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளும் அடங்கும். பெருநகரங்களில் உள்ள பிற வங்கிகளின் ஏடிஎம்களில் மூன்று இலவச பரிவர்த்தனைகளும், பெருநகரங்கள் அல்லாத நகரங்களில் ஐந்து இலவச பரிவர்த்தனைகளும் செய்யப்படலாம். வாடிக்கையாளர்கள் இலவச பரிவர்த்தனைகளின் வரம்பை மீறினால், கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்.