1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! விரைவில் சென்னையில் அனைத்து அரசு பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள்..!

1

சென்னை மாநகரின் முக்கிய போக்குவரத்து அம்சமாக பேருந்துகள் இருந்து வருகிறது. அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வரும் சென்னை மாநகரில் லட்சக்கணக்கான பயணிகள் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாநகர பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக அவ்வப்போது முக்கிய மாற்றங்களை சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”சென்னையில் அனைத்து அரசு பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். மாநகர பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க வேண்டும். மாணவர்கள் படிகளின் அருகே உள்ள ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கிக்கொண்டு பயணம் செய்வதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முன் மற்றும் பின் பக்கங்களில் உள்ள படிக்கட்டுகளில் அருகே உள்ள ஜன்னல்களுக்கு கண்ணாடி நிரந்தரமாக பொருத்தப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ”பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தால் அவர்களுக்கு தக்க அறிவுரை மற்றும் எச்சரிக்கை செய்ய வேண்டும். ஆபத்தான முறையில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் பேருந்தை சாலை ஓரம் நிறுத்தி, மாணவர்கள் பேருந்தின் உள்ளே வந்த பிறகு பேருந்தை இயக்க வேண்டும். அறிவுரைக்கு பின்பும் ஆபத்தான பயணம் மேற்கொண்டால் அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.

பேருந்து நிறுத்தம் வருவதை நடத்துநர் குரல் மூலம் முன்கூட்டியே தெரிவித்து பயணிகளை இறக்குவதற்கு தயார்படுத்த வேண்டும். பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு நிலையான இயக்க முறைமை வாயிலாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவுரை வழங்கி உள்ளது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like