சொத்தின் மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் ஜி.கே.வாசன்..!

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் பதிவுத் துறையின் தொடர் நடவடிக்கையால் பாமர மக்களும், நடுத்தர மக்களும் தொடர்ந்து பணத்தாலும், மனத்தாலும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசு கடந்த இரு வருடங்களில் சொத்து மதிப்பை 50 சதவிகிதம் முதல் 60 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளது என்று குற்றம்சாட்டிய அவர், புதிதாக உருவாக்கவுள்ள மனைப் பிரிவு மதிப்பு நிர்ணயம் செய்வதற்காக மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு மனு அனுப்பினால் மனைப் பிரிவிற்கு மதிப்பு நிர்ணயம் செய்ய உள்ள சர்வே எண்ணை சுற்றியுள்ள மதிப்பில் எது அதிகப்பட்சம் மதிப்பு உள்ளதோ அதன் அடிப்படையில் மதிப்பு நிர்ணயம் செய்துகொடுப்பதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே வழிகாட்டி மதிப்பை 50 முதல் 60 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ள நிலையில் மீண்டும் மாவட்ட பதிவாளர் அவர்கள் நிர்ணயம் செய்ய வேண்டிய மதிப்பில் இருந்து மேலும் 30 முதல் 50 சதவிகிதம் வரை சேர்த்து அதிகபட்சமாக மதிப்பு நிர்ணயம் செய்து வழங்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, “நடுத்தர மக்கள் தங்களது சேமிப்பில் ஒருகுறிப்பிட்ட தொகையில் வீட்டு மனை வாங்க நிர்ணயம் செய்து இருப்பார்கள். ஆனால், திடீர் என்று கூடுதல் பணம் அளிக்க வேண்டிய நிலை ஏற்படுவதால் அவர்கள் கனவு நிறைவேறாமல் போகிறது. தமிழக அரசு சொத்து மதிப்பை அதிகப்படுத்தாமல் பதிவு கட்டணத்தை உயர்தினால் கூட தமிழ்நாடு அரசுக்கு வருமானம் வரும், மக்களும் பயன்பெறுவார்கள்.
அதைவிட்டு விட்டு சொத்து மதிப்பை மீண்டும், மீண்டும் அதிகப்படுத்துவதால் பொதுமக்களுக்கு வருமான வரி சுமை கூடுகிறது. அத்துடன் மக்களுக்கு எந்தவித நன்மையும் அடைவதில்லை. எனவே, தமிழக அரசு சொத்தின் மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை கைவிட்டு, மக்கள் பயனடையும் வகையில் செயல்பட வேண்டும்” என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். வாசன் கோரிக்கையை திமுக அரசு பரிசீலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.