.அரசியலில் புது ட்விஸ்ட் : ஜி.கே.வாசனுக்கு துணை ஜனாதிபதி பதவி..?
குடியரசு துணைத் தலைவராக் இருந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியை கடந்த மாதம் திடீரென ராஜினாமா செய்ய, அதனை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து, வரும் செப்டம்பர் 7ஆம் தேதி புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கலும் வரும் 7ஆம் தேதி தொடங்குகிறது. பாஜக அறிவிக்கும் வேட்பாளர் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ள நிலையில், அதற்காக பட்டியலில் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பேசப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு அகில பாரத பர்கவகுல சங்கத்தின் தலைவர் திருமலை ரவி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “1999 சமயத்தில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்த சமயத்தில் ஜி.கே.மூப்பனாருக்கு பிரதமர் பதவி கிடைக்காமல் கைநழுவிப் போனதை வருத்தத்துடன் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் பலமுறை தங்களது உரைகளில் குறிப்பிட்டு உள்ளனர். இந்த சூழலில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வரவுள்ளது. ஒரு தமிழர் குடியரசு துணைத் தலைவராக வர வேண்டும் என்பது 80 லட்சம் பார்கவ குல மக்களுக்கும், 8.50 கோடி தமிழர்களுக்கும் எண்ணமாக உள்ளது.
இந்த சூழலில் காமராஜர் வழி நடக்கும் ஜி.கே.வாசன் எம்.பிக்கு குடியரசு துணைத் தலைவர் பதவியை வழங்கினால் ஒவ்வொரு தமிழருக்கும் அது மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பிரதமர் தமிழர்கள் மீது கொண்ட மதிப்பும் மரியாதையும் வெளிப்படும். அதேபோல எஸ்ஆர்எம் கல்வி நிறுவனங்களின் தலைவர் பாரி வேந்தரையும் ஏதாவது ஒரு மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்து, தனிப் பொறுப்புடன் கூடிய மத்திய அமைச்சர் பொறுப்பை வழங்க வேண்டும். மேலும் நடிகர் டி.ராஜேந்தரின் திறமைகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கும் வகையில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
.png)