இதை தெரிஞ்சிக்கோங்க..! இன்று முதல் புதிய விதிகள் அமல்..!
தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் இதுவரை 5 தவணைகளாக வழங்கப்பட்ட நிதியுதவி இனிமேல் 3 தவணைகளாக வழங்கப்படும். அதன்படி கர்ப்ப காலத்தின் 4 ஆவது மாதத்தில் ரூ.6000, குழந்தை பிறந்த 4 ஆவது மாதத்தில் ரூ.6000, குழந்தை பிறந்த 9 ஆவது மாதத்தில் ரூ.2000 என வங்கி கணக்கில் வரவைக்கப்படவுள்ளது. மேலும் 3 ஆவது மற்றம் 6 ஆவது மாதங்களில் இருமுறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இன்று (ஏப்ரல் 1 ஆம் தேதி) முதல் கட்டண உயர்வு அமலாவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
ஓலா செயலியில் இருக்கும் பணம் (ola money wallet) சிறிய ப்ரீபெய்ட் கட்டண கருவியாக அதாவது PPI ஆக மாற்றுவதாக அறிவித்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் இனி அதிகபட்சமாக மாதம் ரூ.10000 வரை அதில் பணத்தை வைத்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் வருவது வழக்கம். அதன்படி, இன்று (ஏப்ரல் 1 ஆம் தேதி) புதிய சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால், மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் விலையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை. மார்ச் மாத விலையே நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நிதியாண்டில் தேசிய பென்சன் திட்டத்தில் மாற்றம் வருகிறது. இதற்கான புதிய விதி ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும். புதிய விதியின் கீழ், தேசிய பென்சன் திட்டக் கணக்கில் உள்நுழைய இரண்டு காரணி அங்கீகாரம் தேவைப்படும். NPS சந்தாதாரர்கள் ஆதார் சரிபார்ப்பு மற்றும் மொபைலில் பெறப்பட்ட OTP மூலம் உள்நுழைய வேண்டும்.
நீங்கள் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் கண்டிப்பாக இந்த அப்டேட் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். ஏப்ரல் 1 முதல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது கிரெடிட் கார்டு விதிகளில் பெரிய மாற்றங்களைச் செய்கிறது. வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பிறகு வாடகையைச் செலுத்தினால் அவர்களுக்கு ரிவார்டு பாயிண்ட்கள் கிடைக்காது. இந்த மாற்றம் சில கிரெடிட் கார்டுகளுக்கு ஏப்ரல் 15 முதல் பொருந்தும்.
புதிய வரி முறை ஏப்ரல் 1 முதல் இயல்புநிலை வரி அமைப்பாக மாறும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, நீங்கள் இதுவரை வரி தாக்கல் செய்யும் முறையைத் தேர்வு செய்யவில்லை என்றால், புதிய வரி முறையின் கீழ் வரி தாக்கல் செய்ய வேண்டும். ஏப்ரல் 1 முதல் வருமான வரி விதிகளில் மாற்றம் வருகிறது. புதிய வரி முறையின் கீழ், ரூ. 7 லட்சம் வரை வரி செலுத்தக்கூடிய சம்பளம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கும் புதிய நிதியாண்டில் பிஎஃப் திட்டத்தில் பெரிய மாற்றம் வருகிறது. இந்தப் புதிய விதியின்படி, நீங்கள் வேலை மாறினாலும் உங்களின் பழைய பிஎஃப் ஆட்டோ பயன்முறையில் மாற்றப்படும். அதாவது, இனி நீங்கள் வேலை மாற்றத்தின்போது பிஎஃப் தொகையை மாற்றக் கோர வேண்டியதில்லை. அது தானாகவே மாறிவிடும். உங்கள் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள ஃபாஸ்டாக் கணக்கின் KYC சரிபார்ப்பை வங்கியில் இருந்து நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால் ஏப்ரல் 1 முதல் சிக்கலைச் சந்திக்க நேரிடலாம்.