இதை தெரிஞ்சிக்கோங்க..! வங்கிகளில் நகை அடகு வைக்க புதிய கட்டுப்பாடு..!
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையின்படி, வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை முழுவதும் பணம் செலுத்தி திருப்பி, மறுநாள் தான் மீண்டும் அடகு வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. வட்டி மட்டும் கட்டி அதே தினத்தில் மறு அடகு வைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இதனால் கடன் வாங்கியவர்கள் முழு பணத்தையும் புரட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நகைகளை திருப்பிய மறுநாள் தான் மீண்டும் நகைகளை அடகு வைத்து பணம் பெற முடியும். ரிசர்வ் வங்கியின் இந்த விதிகள் ஏழை எளிய மக்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பலருக்கு, வட்டி செலுத்துவதன் மூலம் நகைகளை மீண்டும் அடகு வைக்கும் வாய்ப்பு அதிக பயனுள்ளதாக இருந்தது.
இது கந்துவட்டி வாங்காமல், தேவையான நிதியை உடனடியாக கிடைப்பதை உறுதி செய்தது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கூடுதல் நிதியைப் பெறுவதற்கு முன், முழு கடன் தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டிய சுமை அதிகமாக இருக்கும். தங்க நகைக்கான வட்டியை மட்டும் செலுத்துவதன் மூலம் முன்பு ரூ. 3 லட்சம் கடன் வாங்கிய ஒருவர் அதற்கான வட்டியை மட்டும் கட்டி திருப்பி வைத்து கொள்ள முடியும். ஆனால் இனி அந்த ரூ. 3 லட்சம் பணத்தையும் மொத்தமாக கட்டி, திருப்பி மறுநாள் தான் மீண்டும் நகை கடன் வாங்க முடியும். இந்த மாற்றம் நிதி ஆதாரங்களை கடுமையாக பாதிப்பது மட்டும் இல்லாமல், முறைசாரா கடன் அல்லது தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலையை உருவாக்கும்.
அக்டோபரில் வெளியிடப்பட்ட ரிசர்வ் வங்கியின் இந்த ஆலோசனையானது, நகைக் கடன் வழங்கும் துறையில் அதிகரித்து வரும் புகார்களுக்கு எதிராக கொண்டு வரபட்டுள்ளது. பல ஆண்டுகளாக நீடித்து வந்த நீண்ட கால கடன்களின் அறிக்கைகள் மற்றும் கடன் வழங்குபவர்களின் சந்தேகத்திற்குரிய மதிப்பீடுகள் ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுக்க வழிவகுத்தது. மிகவும் வெளிப்படையான மற்றும் நியாயமான கடன் வழங்கும் சூழலை வளர்ப்பதே இந்த புதிய வழிகாட்டுதல்களுக்குப் பின்னால் உள்ள நோக்கம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்த விதிமுறைகளை நிறைவேற்றுவது மருத்துவ அவசரநிலைகள், கல்விச் செலவுகள் போன்ற அவசர தேவைகளுக்கு விரைவான பண ஆதாரமாக, நகைக் கடன்களை பெரிதும் நம்பியிருக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு நிதிச் சிக்கல்களை அதிகரிக்கலாம்.