இதை தெரிஞ்சிக்கோங்க..! ஒரே வீட்டில் இரண்டு உரிமைத் தொகை பெற முடியுமா?
கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் சுமார் ஒரு கோடியே 14 லட்சம் பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். விரைவில் இந்த திட்டம் தமிழ்நாட்டில் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. அப்போது இதுவரை கலைஞர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்தில் பயன்பெறாதவர்கள் தகுதியிருந்தால் விண்ணப்பித்து பயனாளியாக சேர்ந்துகொள்ளலாம். ஜூன் நான்காம் தேதி மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்கு புதிய பயனாளிகளை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, அன்றே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெண்களிடமிருந்து பெறப்பட இருக்கிறது.
அதன்பின் பெறப்பட்ட விண்ணப்பங்களின் மீது பரிசீலனை நடைபெற்று தகுதியான பெண்கள் தேர்வு செய்யப்பட்டு கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் பயனாளியாக அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட இருக்கிறார்கள். இருப்பினும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க சில சந்தேகங்கள் மக்களிடம் இருக்கின்றன. கலைஞர் உரிமைத்தொகை பெற வேண்டும் என்றால் வீட்டில் யாரும் முதியோர் உதவித்தொகை பெறக்கூடாது, ரேஷன் கார்டில் முதியோர்கள் பெயர் இருந்தால் அவர்களுக்கு மாத உதவித் தொகை கிடைப்பதால் தங்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை கிடைக்காது என எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் வீட்டில் இருக்கும் முதியவர்களின் பெயர்களை ரேஷன் கார்டில் இருந்து நீக்குவதற்கும் விண்ணப்பிக்கின்றனர்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் விதிமுறைகளிலும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அதாவது, ஒரு வீட்டில் இருக்கும் முதியவர்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் ஏதேனும் ஒரு திட்டத்தின் கீழ் மாத ஓய்வூதியம் பெற்றால், அவர்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை கிடைக்காது. அதாவது ஓய்வூதியம் பெறும் முதியோர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது. அதேநேரத்தில் அந்த வீட்டில் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் இருந்தால் அவர்கள் இந்த திட்டத்துக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம். எனவே, பொதுமக்கள் தவறான தகவல்களை நம்பிக்கொண்டிருக்காமல் அரசு கொடுத்திருக்கும் விதிமுறைகளை தெளிவாக படித்துவிட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கவும்.
அந்தவகையில், ஒரு வீட்டில் வயதான பெண்ணும், உரிமைத்தொகை பெற தகுதியான பெண்ணும் சேர்ந்து ஓய்வூதிய திட்டத்திலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திலும் பயனாளியாக இருக்க முடியும்.