ரூ.2 கோடிக்கு மண்ணுளி பாம்பை விற்க முயன்ற கும்பல்!
மருத்துவ குணம் உள்ளதாக கூறி 2 கோடி ரூபாய்க்கு மண்ணுளிப் பாம்பை விற்பனை செய்ய இருந்த கும்பலை வனத்துறையினர் பிடித்துள்ளனர்.
திருவள்ளூரில் அரிய வகை மண்ணுளி பாம்பு விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருவள்ளூர் வனசரக அலுவலர் கிருஷ்ணகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து ஆயில் மில் பகுதியில், வீடு ஒன்றில் மண்ணுளிப் பாம்பை பதுக்கி வைத்திருப்பது அறிந்த அவர், பாம்பை வாங்குவது போல அவர்களை தொடர்பு கொண்டு வனத்துறை அதிகாரிகளோடு அந்த வீட்டுக்குள் நுழைந்தார்.
அதனைத் தொடர்ந்து அதிரடியாக மண்ணுளி பாம்பையும், அதனை விற்க முயன்ற 3 பேரை கையும் களவுமாக பிடித்தனர். மருத்துவ குணம் இருப்பதாக கூறி பாம்பை 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தங்கமணி, பொன்னையன், உதயகுமார் ஆகிய மூன்று பேரை பிடித்து வனத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்ணுளிப் பாம்பு 5.5 அடி நீளமும், 4.5 கிலோ எடையும் கொண்டது எனவும், இதுவரை பறிமுதல் செய்த மண்ணுளி பாம்புகளிலேயே இதுவே பெரிய பாம்பு எனவும்,அதனை வண்டலூர் பூங்காவில் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in