நாளை முதல் , ஜூன் 30 வரை முழு பொது முடக்கம் என வெளியாகிய தகவல் !! மதுரையில் அலை மோதும் கூட்டம்..
சென்னையைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்திலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாள்களாக பாதிப்பு உறுதி செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை முந்தைய தினங்களைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது.
இந்நிலையில் பொது முடக்கத்தை மேலும் அமல்படுத்துவது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வந்தது. ஜூன் 24 முதல் 30 தேதி வரை பொது முடக்கத்தை அமல்படுத்த அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.
மதுரை மாநகராட்சி பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஊரகப் பகுதிகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் ஊரகப் பகுதிகளிலும் முழு முடக்கம் அமலில் இருக்கும். அம்மா உணவகங்கள் ,
சமுதாயக் கூடங்கள் இயங்க அனுமதி உண்டு. ஆட்டோ, டாக்ஸி போன்ற வாகனங்களுக்கு அனுமதி கிடையாது, மருத்துவ அவசர வாகனங்கள் இயங்க மட்டுமே அனுமதி உண்டு. மதுரையில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 705 ஆக அதிகரித்திருக்கும் நிலையில் , மாவட்ட நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
செல்போன் வாயிலாக உணவு பொருள்களை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேநீர் கடைகளுக்கு அனுமதி கிடையாது. தள்ளுவண்டிக் கடைகளில் காய்கறி, பழங்களை விற்பனை செய்ய காலை 6 மணி முதல் 1 மணி வரை அனுமதி. அத்தியாவசியப் பொருள்களை மக்கள் நடந்து சென்றே வாங்க வேண்டும்.
ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கும் கடைகளுக்குச் சென்று பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கலாம். பணிகள் நடைபெறும் இடத்திலேயே தொழிலாளர்கள் தங்கியிருந்தால், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Newstm.in