சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு !! மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் ?
கொரோனா பரவலை தடுக்க , சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 12 நாட்கள் முழு முடக்கம் நடைமுறையில் உள்ளது. இந்த 4 மாவட்டங்களில் சுகாதார தடுப்பு நடவடிக்கைகள், ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சில நாட்களாக சென்னையை தொடர்ந்து , மேலும் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஆகையால் அந்த மாவட்டங்களிலும் கொரோனா பரவலை தடுக்க முழு முடக்கம் அமல்படுத்தலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, வேலூர், மதுரை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக மதுரையில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இதுவரையில் அங்கு 705 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 381 பேர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர். 316 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, மதுரையில் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மதுரையில் இன்று நள்ளிரவு முதல் 30ம் தேதி வரையில் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு மற்றும் மேற்கு ஊராட்சிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
அதன்படி, காலை 6 மணி முதல் 2 மணி வரை மேட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் திறக்கப்பட்டிருக்கும். உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
டீக்கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மதுரையை தொடர்ந்து திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு செயல்படுத்த திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
Newstm.in