இனி பஸ் முதல் மெட்ரோ வரை அனைத்திற்கும் ஒரே டிக்கெட் போதும்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/941a0ba3f49f2eb27382c6b64d5b449c.png?width=836&height=470&resizemode=4)
சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரிய நிலையில் அடுத்த மாதம் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது. இதன்மூலம், கியூஆர் கோடு பயன்படுத்தி அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலமாக பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் அறிமுகம் செய்யும் திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அரசு பேருந்துகளில் நேரடியாக டிக்கெட் பெற்றுக் கொள்ளும் முறைதான் உள்ளது. ரயிலகளில் யூடிஎஸ் செயலி முறையிலும், நேரடியாகவும் டிக்கெட் பெறலாம். மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய, பயண அட்டை, செயலி மற்றும் நேரடியாக டிக்கெட் பெறும் வசதி உள்ளது.பொதுமக்கள் ஒரே பயணத்தில் இந்த மூன்றிலும் பயணம் செய்ய வேண்டும் என்றால் தனித் தனியாக டிக்கெட் எடுக்க வேண்டி உள்ளது. இதற்கு தீர்வு காண ஒருங்கிணைந்த டிக்கெட் முறை அமல்படுத்தப்படவுள்ளது.அதன்படி வரும் ஜூன் 2 வது வாரம் முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
அதாவது ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி இந்த மூன்றிலும் பயணிக்க முடியும். இதற்காக ஒரு கார்டு அல்லது பாஸ் போன்ற அட்டை வழங்கப்படும். இந்த கார்டை மெட்ரோ நிலையத்தில் ஸ்கேன் செய்து அதில் பயணிக்க முடியும். மின்சார ரயில்களில் செக்கர் சோதனை செய்யும் சமயங்களில் இந்த கார்டை ஸ்கேன் செய்து கொள்ள முடியும். அதுமட்டுமன்றி பேருந்துகளிலும் நடத்துனர்களிடம் ஸ்கேன் செய்யும் கருவிகள் வழங்கப்படும்.
எனவே இந்த ஒரு கார்டை ரீ சார்ஜ் செய்து அதன் மூலம் மூன்று சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். எந்த சேவையை பயன்படுத்த வசதியாக இருக்கிறதோ மக்கள் அதை பயன்படுத்த முடியும். இதனால் அவர்கள் கவுன்ட்டர்களின் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது.