ஆவின் முதல் சத்துணவு வரை அனைத்திலும் கலப்படம் - சீமான் ஆவேசம்..!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில்," பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவிநியோகத் திட்டத்தில் தரமற்ற உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவது புதுமையல்ல. பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்ட சம்பவமும், ஆவின் பாலில் தண்ணீர் கலப்பு, சத்துணவு முட்டைகளில் குறைபாடுகள் ஆகியனமும் தமிழகத்தில் நடைபெற்று வந்த ஊழலின் சாட்சி.
துவரம் பருப்பில் கலப்பு தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆனால் இத்தனை காலமாக அதிகாரிகள் இதைக் கண்டுகொள்ளாதது ஏன் என்பது மிகப்பெரிய சந்தேகமாகும். உணவுப் பொருள் வழங்கல் துறையினரின் அலட்சியம் தெளிவாகக் காட்டுகிறது.
அரிசி, பாமாயில், சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அனைத்து பொதுவிநியோகப் பொருட்களிலும் தரக் குறைபாடுகள் தென்படும் நிலையில், தற்போது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பது மக்கள் நம்பிக்கையை நிலைநாட்ட முடியாது.
தமிழ்நாடு அரசு விற்கும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்படம்; பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டையில் கூமுட்டைகள் கலப்படம், பொங்கல் விழா பரிசுத் தொகுப்பில் கலப்படம்; நியாயவிலைக்கடையில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரையில் கலப்படம், காதாரத்துறையில் வழங்கப்படும் மருந்துகளில் கலப்படம் , வேளாண்துறையில் விவசாயிகளுக்கு விற்கப்படும் உரத்தில் கலப்படம், மாநகராட்சி வழங்கும் குடிநீரில் சாக்கடை நீர் கலப்படம், மாநில கல்விக்கொள்கையில் ஒன்றிய கல்விக்கொள்கை கலப்படம் என்று திராவிட மாடல் திமுக ஆட்சியின் கலப்பட பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
மக்களிடம் மலிவாக தரமான பொருட்கள் வழங்குகிறோம் என கூறும் அரசு, உண்மையில் மக்களின் உடல் நலத்தையே சீர்குலைக்கும் பொருட்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும். உணவுப் பொருள் வழங்கல் துறையில் நடைபெறும் ஊழல்களை முற்றிலும் தடுப்பதற்கும், பொதுவிநியோகத் திட்டத்தை நியாயமான முறையில் செயல்படுத்துவதற்கும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சீமான் தனது அறிக்கையில் கூறி இருந்தார்.