தீவிரவாதிகள் அல்ல சுதந்திர போராட்ட வீரர்கள்.. தீவிரவாதிகளை புகழ்ந்த பாக். துணை பிரதமர்..!

இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் துணை பிரதமரும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார், "ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடத்தியவர்கள் விடுதலைக்காக போராடுபவர்கள் இருக்கலாம்" என்று கூறியிருக்கிறார். அவரது கருத்துக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.அதுமட்டுமின்றி, ‛‛பாகிஸ்தான் மீது இந்தியா நேரடியாக தாக்குதல் நடத்தினால் அதனை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கமாட்டோம். பழிக்கு பழி என்ற அடிப்படையில் திருப்பி தாக்குவோம்'' என வாய்ச்சவடால் விடுத்துள்ளார்.
கடந்த 22ம் தேதி இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. தாக்குதலில் மொத்தம் 26 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உயிரிழந்தவர்களில் ஒருவர் வெளிநாட்டை சேர்ந்த பயணி என்று தெரிய வந்திருக்கிறது. அதேபோல மற்றொருவர் இந்திய உளவுத்துறையை சேர்ந்த அதிகாரி என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலா தலம்தான் பஹல்காம். இங்கிருந்து 6 கி.மீ தொலைவில் பைசரன் பள்ளத்தாக்கு இருக்கிறது. இதற்கு அருகில்தான் புகழ்பெற்ற துலியன் ஏரி இருக்கிறது. பஹல்காம் பகுதியிலிருந்து பைசரன் பள்ளத்தாக்குக்கு போக வாகன வசதிகள் கிடையாது. நடந்துதான் போக வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு குதிரை சவாரி செய்யும் வசதி இருக்கிறது. பைன் மரங்கள் சூழ்ந்த பகுதியில் நடுவில் மொட்டையான புல்வெளி இருக்கும். இதனை பார்ப்பதற்கு மினி சுவிட்சர்லாந்து போல இருக்கும். எனவே பயணிகள் அதிக அளவில் வருவார்கள். இதை பயன்படுத்திக்கொண்ட தீவிரவாதிகள் திறந்தவெளியில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு 'தி ரெசிஸ்டன்ட் பிரன்ட்' எனும் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இது லக்ஷர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் கிளையாகும். இந்த கிளை அமைப்புக்கு பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐஎஸ் உதவி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆக இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. எனவே பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. சிந்து நதி நீரை நிறுத்தி வைத்தது. அதேபோல பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவிலிருக்கும் பாகிஸ்தானியர்கள் அனைவரும் வெளியேற உத்தரவிட்டிருக்கிறது.