பள்ளி மாணவர்களுக்கு நாள்தோறும் இலவசமாக தேநீர்.. முதியோர் இல்ல பாட்டிகள் அசத்தல் !!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதியோர் இல்லம் பாட்டிகள் நாள்தோறும் மாலையில் தேநீர் கொடுத்து மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆதரவற்றோர் இல்லம் செயல்பட்டுவருகிறது. இந்த இல்லத்தை ஈரநெஞ்சம் என்கிற தன்னார்வ அறக்கட்டளை பராமரித்துவருகிறது. ஆனால், இங்கு இருக்கும் பாட்டிகள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி மற்றவர்களுக்கு உதவி செய்து தங்கள் மகிழ்ச்சியை பெருக்கிக்கொள்கின்றனர்.
அந்த வகையில், முதியோர் இல்லத்துக்கு அருகிலேயே மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பெரும்பாலும் ஏழை எயி குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் தான் அங்கு படிக்கின்றனர். சிறந்த கல்வியை பெற ஆரோக்கியமான உணவு வழங்க முதியோர் இல்லத்தில் இருந்த பாட்டிகள் முடிவு செய்தனர்.
அதன்படி, சில ஆண்டுகளுக்கு முன்பு முதியோர் இல்லத்தில் உள்ள பாட்டிகள் தினசரி பள்ளிக் குழந்தைகளுக்கும் காலை உணவு சமைத்து கொடுத்துவந்தனர். கொரோனா காரணமாக இடையில் அது தடைப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மாலையில் மாணவர்களுக்கு தேநீர் மற்றும் பிஸ்கெட் வழங்கிவருகின்றனர். தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வையொட்டி மாலை சிறப்பு வகுப்பு நடக்கிறது. பலர் சோர்வாகக் காணப்பட்டனர். இதனையொட்டி அந்த மாணவர்களுக்கும் தனியாக தேநீர் வழங்கி அசத்தி வருகின்றனர் பாட்டிகள். இது குறித்து பாட்டிகள் கூறுகையில், எங்கள் பேரக் குழந்தைகளாகப் பார்த்து அவர்களுக்கு வழங்குகிறோம். எங்களுக்கும் நிம்மதி கிடைப்பதுடன், அவர்கள் உற்சாகமாக கல்வியில் கவனம் செலுத்துவதாக மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
newstm.in