இன்று முதல் திருப்பதியில் இலவச தரிசனம்!
இன்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான போர்டு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு அங்கு அதிகரிக்க தொடங்கியதால் தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது.
இதனிடையே வழக்கமாக நடைபெறும் பிரம்மோற்சவ விழாக்கள் பக்கதர்கள் இன்றி நடைபெற்றது. பிரமோற்சவம் சனிக்கிழமை முடிவுற்றது.
இந்நிலையில் திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
நாள் ஒன்றுக்கு 3,000 டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைவரும் அரசின் விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.