லட்டு விவகாரம் - 4 பேர் கைது..!

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கொள்முதல் செய்த நெய்யில் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதம் தரமற்றதாக உள்ளது என புகார் எழுந்தது.
இந்நிலையில், ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், கோயிலின் புதிய நிர்வாக அதிகாரியாக சியாமள ராவ் நியமிக்கப்பட்டார். அவர் மேற்கொண்ட ஆய்வில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் குறைவாக இருப்பதை அறிந்தார்.
அந்த நெய்யை குஜராத் மாநிலம், ஆனந்த் பகுதியில் உள்ள பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைத்தார். கடந்த ஜூலை 17-ம் தேதி வந்த பரிசோதனை அறிக்கையில், "நெய்யில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு கலந்துள்ளது. இது தரமற்ற நெய்" என்று தெரிவிக்கப்பட்டது.
திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் தனியார் பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர் உள்பட 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள போலே பாபா டெய்ரி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்கள் பிபின் ஜெயின், பொம்மில் ஜெயின், வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தின் சிஇஓ வினய் காந்த் சவுடா, திண்டுக்கல் தனியார் டெய்ரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகரன் உள்பட 4 பேரை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.