முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோவை மருத்துவமனையில் அனுமதி..!

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக இருக்கும் போதில் இருந்தே பல ஆண்டுகளாக முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார். அதற்காக கோவையில் வருடந்தோறும் தங்கி ஆயுர்வேத சிகிச்சை எடுத்துச் செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் சிகிச்சை எடுக்க கோவை கணபதி சங்கனூரில் உள்ள ஆர்.கே நேச்சர் க்யூர் ஹோம் ஆயுர்வேத மருத்துவமனையில் அனுமதி. இந்த வருடமும் சிகிச்சை எடுக்க சென்றுள்ளாரே தவிர மற்றபடி அவருக்கு வேறு எந்த உடல்நலப் பிரச்னையும் இல்லை என்று கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து 2022ஆம் ஆண்டு நீக்கப்பட்டார். அதிமுகவும் எடப்பாடி பழனிசாமி கைகளுக்கு சென்றுவிட்டது. இதனால் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் என்ற பெயரில் ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார்.
அதிமுகவில் சேர ஓபிஎஸ் தீவிரம் காட்டினாலும், இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என எடப்பாடி பழனிசாமி கறார் காட்டுகிறார். இந்த நிலையில் அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக - பாஜக கூட்டணி நேற்று உறுதியாகியுள்ளது.
இதனால் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் நிலை என்னவென்ற கேள்வி எழுந்தது. வழக்கமாக பாஜக மேலிடத் தலைவர்கள் தமிழகம் வந்தால் அவர்களை சந்திக்க முயற்சிக்கும் ஓபிஎஸ், அமித்ஷாவே நேற்று வந்துள்ள நிலையில், சென்னையில் இல்லாமல் கோவைக்கு சிகிச்சைக்காக சென்றுவிட்டார் என்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
எனினும், பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பு ஏற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதன் மூலம் ஓபிஎஸ் தான் பாஜக கூட்டணியில் தான் நீடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.