கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலையை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் - முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/d471ddf24bd3b9fe2e9a56e3bc52703a.jpg?width=836&height=470&resizemode=4)
கோவையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில், தமிழ்நாடு பொதுமேடை அமைப்பின் சார்பில் கருத்தரங்கம் நடந்தது.
இதில், முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசுகையில், ‘‘இந்தியாவில் கடந்த 10 ஆண்டு காலமாக மக்கள் விரோத மோடி ஆட்சி நடந்துள்ளது. இந்த 10 ஆண்டு காலத்தில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது. எதிர்கட்சியினரை பழி வாங்கியதுதான் மோடி அரசின் சாதனை.
அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்தி, பாஜவை மட்டும் பலப்படுத்தி வருகிறார் பிரதமர் மோடி. ஏழை, அடித்தட்டு மக்களை பற்றி அவர் ஒருபோதும் கவலைப்பட்டது இல்லை. கார்ப்பரேட்கள் மட்டுமே அவருக்கு முக்கியம். ஏனென்றால், அவர்கள்தான் தேர்தல் செலவுக்கு கோடி கோடியாக பணம் கொடுக்கிறார்கள். அதனால், கோடி கோடியாக பெறும் மோடி அரசு நமக்கு தேவையில்லை.
மோடி ஆட்சி தொடரலாமா? என்று கேள்விதான் கேட்டுள்ளோம். பதில் என்னவென்றால் மோடி ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும். இதுதான் நோக்கம். இதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மோடி ஆட்சி வீழ்த்தப்பட வேண்டுமென்றால் கோவையை பொறுத்தவரை அண்ணாமலை இங்கு வீழ்த்தப்படவேண்டும். வீழ்த்தப்படுவது மட்டுமல்ல. என் கருத்து அவர் டெபாசிட் வாங்காத அளவுக்கு வீழ்த்தப்படவேண்டும்'' என்றார்.