முழு அரசு மரியாதையுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம்..!
முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் (92) தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த டிச.26 இரவு 9.51 மணி அளவில் காலமானார். இதைத் தொடர்ந்து, தில்லி மோதிலால் நேரு சாலையில் உள்ள அவரது இல்லத்தில் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலிக்காக மன்மோகன் சிங்கின் உடல் வைக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, முதல்வர்கள் மு.க. ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, சுக்வீந்தர் சிங் சுக்கு உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மன்மோகன் சிங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதனை அடுத்து, மன்மோகன் சிங்கின் உடல் இன்று காலை பொதுமக்கள் அஞ்சலிக்காக காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அதன்பிறகு காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து தில்லி யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள நிகம் போத் காட் எரியூட்டுத் தலத்திற்கு ராணுவ வாகனத்தில் வைத்து அவரது உடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.
பிறகு நிகம் போத் காட்டில் வைத்து 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சீக்கிய மத முறைப்படி அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பூடான் மன்னர் ஜிக்மே வாங்சுக், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.