1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார் கர்நாடக முன்னாள் முதல்வர்..!

1

கர்நாடக முன்னாள் முதல்வரான ஜெகதீஷ் ஷெட்டருக்கு கடந்த ஆண்டு ஏப்ரலில் அங்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க.வில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஹூப்ளி-தார்வாட் மத்திய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. பா.ஜ.க.வில் அவர் இருந்த போது இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். என்றாலும் 2023 தேர்தலில் பா.ஜ.க.வின் மகேஷ் தெங்கினாகையிடம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வியடைந்தார். 

இதனைத் தொடர்ந்து நடந்த கர்நாடக சட்டமேலவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.சி. ஆனார். இந்த நிலையில், ஜெகதீஷ் ஷெட்டர் நேற்று (வியாழக்கிழமை) காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார். 

கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, மாநில பா.ஜ.க. தலைவர் பி.ஒய். விஜயேந்திரா ஆகியோர் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். மீண்டும் கட்சியில் இணைந்து குறித்து ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், 

கடந்த காலங்களில் கட்சி எனக்கு பல பொறுப்புகளை கொடுத்துள்ளது. சில பிரச்சினைகள் காரணமாக நான் கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தேன். கடந்த 8 - 9 மாதங்களில் பல்வேறு விவாதங்கள் நடந்தன, பா.ஜ.க.வினர் மீண்டும் என்னைக் கட்சிக்கு வருமாறு அழைத்தனர். 

எடியூரப்பாவும், விஜயேந்திராவும் நான் மீண்டும் பா.ஜ.க.வுக்கு திரும்ப வேண்டும் என்று விரும்பினர். மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற நம்பிக்கையில் நான் மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன் என்று கூறினார்.

67 வயதாகும் ஜெகதீஷ் ஷெட்டர், 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். கடந்த 2012 - 13 ஆண்டுகளில் பத்து மாதங்கள் கர்நாடகாவின் முதல்வராக இருந்துள்ளார். கடந்த 1980-ம் ஆண்டு தனது அரசியல் வாழ்வைத் தொடங்கிய ஜெகதீஷ், கர்நாடக பா.ஜ.க.வில் மாநில தலைவர், கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 

லிங்காயத் சமூகத்தில் செல்வாக்கு மிக்கத் தலைவரான இவர், கர்நாடக அரசில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சராக இருந்துள்ளார். அதே போல், கடந்த 2008-ம் ஆண்டு கர்நாடகாவில் பா.ஜ.க. முதல் முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைத்த போது, சட்டப்பேரவை சபாநாயகராகவும் இருந்துள்ளார்.

Trending News

Latest News

You May Like