கர்நாடகாவில் முன்னாள் டி.ஜி.பி. அவரது வீட்டிலேயே கொலை; மனைவியிடம் போலீஸ் விசாரணை..!

கர்நாடகாவில் டி.ஜி.பி.,யாக இருந்து ஓய்வு பெற்றவர் ஓம்பிரகாஷ், 68. பெங்களூருவில் உள்ள ஹெச்.எஸ்.ஆர்., லேஅவுட்டில் வசித்து வந்த அவர் வீட்டில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
3 மாடிகள் கொண்ட அவரது வீட்டின் தரைதளத்தில் உடலில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரின் மனைவி பல்லவி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து சென்ற போலீசார், விசாரணையை தொடங்கினர். அப்போது ஓம்பிரகாஷ் கொல்லப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர். அவரின் உடலில் கத்தியால் குத்தப்பட்டு இருப்பதற்கான அடையாளங்கள் கண்டனர்.
விசாரணையில் ஓம்பிரகாஷ் குடும்பத்தில் பணப்பிரச்னை இருந்து வந்ததும். ஏராளமான கடன் வாங்கி இருந்ததே இதற்கு காரணம் என்பதும் தெரிய வந்தது.
இதன் காரணமாக கணவன், மனைவி இடையே வாக்குவாதம் எழுந்து, ஓம் பிரகாஷை மனைவி பல்லவியே கத்தியால் குத்தியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததன் அடிப்படையில் அவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொல்லப்பட்ட ஓம்பிரகாஷ், பீகார் மாநிலம் சம்பாரண் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1981ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ்., அதிகாரியான அவர், புவியியலில் முதுகலை பட்டம் பெற்றவர். கர்நாடக கேடர் அதிகாரியான ஓம்பிரகாஷ், ஹரப்பனஹள்ளியில் உதவி காவல் கண்காணிப்பாளராக தமது பணியைத் தொடங்கியவர்.
அதனை தொடர்ந்து பல பதவிகளை வகித்த அவர், 2015ம் ஆண்டு பிப்.28ம் தேதி கர்நாடகா டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டார். 2017ல் அவர் ஓய்வு பெற்றார்.