முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி போட்ட பிச்சையில் நான் மருத்துவம் படிக்கவில்லை... தமிழிசை செளந்தரராஜன்..!
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது: மறைந்த ஆளுநர் இல. கணேசன் ஆர். எஸ். எஸ். இல் இருந்து ஆளுநர் பொறுப்பு வரை வளர்ந்தவர். அவர் மிகுந்த தேசப்பற்றாளர். இதனால், தான் அவரது உயிர் சுதந்திர தினத்தன்று பிரிந்துள்ளது. அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. தஞ்சாவூரில் நான் மருத்துவம் படித்துக் கொண்டிருந்த போது, மருத்துவமனைகள் பொதுமக்களுக்கு சேவை வழங்கும் வகையில் இல்லாமல் இருந்தது. இந்த மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் இல்லாத நிலை, ஸ்கேன் மெஷின் வாங்கிவிட்டு அதற்கு ஏசி பொருத்த முடியாத நிலை இருந்தது. அதே சமயத்தில் கனடா நாட்டுக்கு நான் சென்றபோது அங்கு அபரீதமான வளர்ச்சியே பார்த்தேன்.
இதே போல, இந்தியாவும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி அதிக முறை ஆட்சியில் இருந்துள்ளது. 400 எம்.பி.க்களுக்கு மேல் காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளனர். இருந்தாலும் நாடு முன்னேற்றம் அடையாமல் இருந்துள்ளது. இதெல்லாம் எனக்கு சிறுவயதிலிருந்தே அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டியது. அப்போது, பாஜகவின் வளர்ச்சியே பார்த்தேன். அதில், ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு ரத்தம் தேவைப்பட்டதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த 10 பேர் ரத்தம் கொடுத்து விட்டு சென்றனர். அதன் பிறகு, ஆர். எஸ். எஸ். பற்றிய முழுமையான புரிதல், பாஜகவை பற்றி தேசத்துக்கான வளர்ச்சியை பற்றி பேசுவதற்கான ஒரு எண்ணம். இவை எல்லாம் என்னை அரசியலுக்கு ஈர்த்தது.
நான் மருத்துவம் பயின்றதில் மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதிக்கு பங்கு உண்டு என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் நான் கல்லூரி படித்தபோது எம். ஜி. ஆர் தான் முதல்வராக இருந்தார். மேலும் எனது திறமை, ஒரு பாடங்களில் கூட தோல்வி அடையாத மாணவி, மருத்துவ உதவி பேராசிரியராகவும், ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் நன்கு படித்ததன் காரணமாக எனக்கு என்று ஒரு தனி திறமை உள்ளது. இதன் மூலமே நான் மருத்துவம் பயின்றேன். ஆனால், அதை விடுத்து விட்டு முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியால் தான் தமிழிசை சௌந்தரராஜன் மருத்துவம் படித்தார் என்றும், அவர் போட்ட பிச்சை என்றும் திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
எனது நிறம் மற்றும் உயரத்தால் பல வாய்ப்புகள் பறிக்கப்பட்டன. இதனால், ஒரு வாய்ப்பு என்னிடமிருந்து தவறி செல்லும் போதும், பறிக்கப்படும் போதும் நான் அதற்காக மனம் வருந்தி அழுதது இல்லை. அது எதற்காக என்னிடம் இருந்து தவறி சென்றது. என்னிடம் உள்ள திறமையில் என்ன குறை உள்ளது என்பதை தான் ஆராய்வேன். இதனால் எனது குறைகளை நிறைகளாக மாற்றுவது எனது தனி சிறப்பாகும். இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் முன்னேறி உள்ளது. ஆனால், இந்த முன்னேற்றத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தினர் முயற்சித்ததாகவும், பாஜகவினருக்கு இந்த முன்னேற்றத்தில் மகிழ்ச்சி இல்லை எனவும் கூறப்படுகிறது. தமிழகம் பெருமை பட்டிருப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தேசத்தை பற்றி பேசினாலும், தேசியக் கட்சியில் இருந்தாலும் தமிழகத்துக்கும், தமிழுக்கும் எதிரானவர்கள் போல மாய பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர். ஹந்தியை கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினால் தமிழுக்கு எதிரானவராகவும், இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது என்று கூறினால் தமிழகத்துக்கு எதிராகவும் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். திராவிட முன்னேற்ற கழகம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒருங்கிணைந்த கட்சியை கூட்டணிக்கு வலு சேர்க்கும் என்று தெரிவித்தார்.