1. Home
  2. தமிழ்நாடு

வரலாற்றில் முதல்முறையாக கொட்டப்பட்ட கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை..!

Q

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே நடுக்கல்லூர், கோடகநல்லூர் கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு ஊருக்கு வெளியே உள்ள குளத்தில் சமீபகாலமாக கேரள மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவக் கழிவுகள் இரவோடு இரவாகக் கொட்டப்பட்டு வருகின்றன.இதனால் அங்கு மக்களுக்கு கடும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. 

சில தினங்களுக்கு முன் கல்லூர் பகுதியில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து டன் கணக்கில் கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள் குளத்தில் கொட்டப்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகின.

மேலும், கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூன்று நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

இதனிடையே நடுக்கல்லூா் உள்ளிட்ட நான்கு இடங்களிலும் சேகரிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் மற்றும் தனியாா் மருத்துவமனை கழிவுகள் தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கான மருந்து குப்பிகள், ஊசிகள், ரத்த மாதிரிகள், ஆவணங்களை திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சேகரித்து பசுமைத் தீா்ப்பாயத்திடம் ஒப்படைத்தது.

அதைத் தொடா்ந்து பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவுப்படி கேரள மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைமைப் பொறியாளா் பின்சி அகமது, சுகாதாரத் துறை அதிகாரி கோபுகுமாா் ஆகியோா் தலைமையில் திருவனந்தபுரம் மாநகராட்சி அலுவலா்கள், மருத்துவக் கழிவுகளை அகற்றும் அமைப்பினா் உள்பட 8 போ் கொண்ட குழு திருநெல்வேலி மாவட்டத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட நடுக்கல்லூா், கொண்டாநகரம், பழவூா், இலந்தைக்குளம், சிவஞானபுரம் உள்பட 7 இடங்களிலும் நேரில் ஆய்வு செய்தனா்.

அவா்களும், மருத்துவக் கழிவுகளின் மாதிரிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரித்து கொண்டனா்.

இந்த நிலையில், இன்று மீண்டும் கேரளத்தில் இருந்து 25 பேர் கொண்ட குழுவினர் நெல்லை வந்துள்ளனர்.

அவர்கள் மருத்துவக் கழிவுகளை கேரள மாநிலத்துக்கே திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like