1. Home
  2. தமிழ்நாடு

களைகட்டும் உணவுத் திருவிழா : 286 வகையான சைவ, அசைவ உணவுகள்..!

1

சென்னை மெரினா கடற்கரையில் உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திருவிழாவைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து, உணவுகளை ருசித்தார்.

மகளிர் சுய உதவிக்குழுக்களின் கைவண்ணத்தில் இங்கு, மதுரை கறிதோசை, விருதுநகர் கரண்டி ஆம்லெட் நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன் உள்ளிட்ட 286 வகையான சைவ, அசைவ உணவுகள் கிடைக்கின்றன.

65 சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மகளிர், சுத்தமாகவும், சுவையாகும், சுகாதாரமான முறையிலும், கலப்படம் இல்லாமல் 35 அரங்குகளில் உணவுகளைப் பரிமாறி வருகின்றனர்.

குறிப்பாகக் கோவை கொங்கு பிரியாணி தொடங்கி, கொல்லிமலை முடவாட்டுக்காங் கிழங்கு, பள்ளிபாளையம் சிக்கன், சேலம் தட்டுவடை செட், நெல்லை அல்லா, விருதுநகர் பால்கோவா முதல், பனை பாயாசம், வெற்றிலை பாயாசம் என வித்திவாயசமான உணவு வகைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சுடச்சுட உணவுகள் மட்டுமின்றி ஆயத்த உணவுகளான ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, திருவண்ணாமலை சிமிலி உள்ளிட்ட 520 ஆயத்த உணவுகளும் FSSAI தரச்சான்றுடன் இந்த உணவுத் திருவிழாவில் இடம்பிடித்துள்ளன. இதற்கெனப் பிரத்யேகமாக 7 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

உணவு மட்டுமின்றி 3 அரங்குகளில் சுய உதவிக்குழுவினரின் கைவினைப்பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. சரி இத்தனை உணவுகளும் எப்போது, எந்த நேரத்தில் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

டிசம்பர் 24 ஆம் தேதிவரை பகல் 12.30 மணி முதல் இரவு 8.30 மணிவரை நடைபெறும். இந்த உணவு திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். அதே போல் பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்து உணவுத் திருவிழாவைக் கொண்டாடும் வகையில் தப்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், புலியாட்டம் போன்ற நடனங்களும் இடம்பெற இருக்கின்றன.

உணவுத்திருவிழாவுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை, லேடி வெலிங்டன் கல்லூரிகளின் வளாகங்களில் இலவசமாக நிறுத்திக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவை மட்டுமின்றி மாலை நேரங்களில், உணவு வகைகளின் தரத்தை மேம்படுத்துவது குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டின் மொத்த உணவுகளையும் ஒரே இடத்தில் ருசித்து மகிழ சென்னைவாசிகளுக்கு இது ஒரு சிறப்பான வாய்ப்பு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Trending News

Latest News

You May Like