தாமிரபரணியில் வெள்ள அபாய எச்சரிக்கை..!

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப் பகுதிகளிலும் பிற இடங் களிலும் நேற்று முன்தினம் இடியுடன் பலத்த மழை பெய்தது. திருநெல்வேலி மாநகர பகுதி சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): அம்பாசமுத்திரம்-18, சேரன்மகாதேவி-14.80, மணி முத்தாறு-20, நாங்குநேரி-12, பாளையங்கோட்டை-4, பாபநாசம்-18, ராதாபுரம்-67, திருநெல்வேலி-8.80, சேர்வலாறு-9, கன்னடியன் அணைக்கட்டு-25.80, களக்காடு-22.40, கொடுமுடியாறு-18, மூலைக்கரைப்பட்டி-10, நம்பியாறு-13, மாஞ்சோலை-74, காக்காச்சி-65, நாலுமுக்கு-56, ஊத்து பகுதியில் 35 மி.மீ மழை பதிவானது.
பலத்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,082 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 404 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 366 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 10 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 52.50 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணை நிரம்பும் தருவாயில் உள்ளதை அடுத்து, அணைக்கு வரும் 30 கனஅடி தண்ணீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது.
இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பிற்பகலிலும், மாலையிலும் பல்வேறு இடங்களில் இடியுடன் பலத்த மழை பெய்தது. மாலை 4 மணி நிலவரப்படி அம்பாசமுத்திரத்தில் 20 மி.மீ, சேரன்மகாதேவி-8, மணிமுத்தாறு-15.20, நாங்குநேரி-3, பாளையங்கோட்டை, பாபநாசம்- தலா 15, ராதாபுரம்-8, திருநெல்வேலியில் 30 மீ.மீ. மழை பதிவாகியிருந்தது. திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. போக்குவரத்து சிக்னல் அருகிலும், சரோஜினி பூங்கா எதிரே சாராள் தக்கர் மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் பிரதான சாலை சந்திப்பிலும் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் மக்கள் சிரமப்பட்டனர். பாளையங்கோட்டையில் எப்போது மழை பெய்தாலும் இப்பகுதியில் குளம்போல் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் அவதியுற்றனர்.
தென்காசி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 55 மி.மீ. மழை பதிவானது. சிவகிரி, கருப்பாநதி அணையில் தலா 20 மி.மீ., ஆய்க்குடியில் 12 மி.மீ., சங்கரன்கோவிலில் 10 மி.மீ., கடனாநதி அணையில் 5 மி.மீ., செங்கோட்டையில் 2.10 மி.மீ., குண்டாறு அணையில் 2 மி.மீ., அடவிநயினார் அணையில் 1 மி.மீ. மழை பதிவானது. தொடர் மழையால் அணை களில் நீர்மட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் ஒன்றரை அடியும், ராமநதி அணை நீர்மட்டம் 2 அடியும் உயர்ந்துள்ளது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.