இரவோடு இரவாக தயாராகும் கொடிக்கம்பம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் இன்று பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. சுமார் 500 ஏக்கரில் மாநாட்டு திடல், 2 பார்க்கிங் இடங்கள், ஒன்றரை லட்சம் பேர் அமர இருக்கைகள், தொண்டர்கள் அமரும் இடங்களிலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பறைகள் என ஏராளமான வசதிகளை அக்கட்சி மேலாண்மை குழு ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மாநாட்டின் தொடக்கமாக மாநாட்டு திடலுக்குள் நுழையும் போது கட்சி கொடியை ஏற்றி வைத்து விட்டு, அதன்பிறகே தலைவர் விஜய் மேடைக்கு செல்வதற்கு திட்டமிடப்பட்டது. அதற்காக 100 அடி கொடிக் கம்பத்தை நடும் பணி இன்று மேற்கொள்ளப்பட்டது. ராட்சத கிரேன் மூலம் கொடிக்கம்பம் நடப்பட்டபோது எதிர்பாராத விதமாக கொடிக்கம்பம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. அதிவேகமாக சாய்ந்த அந்த பிரம்மாண்ட கொடிக்கம்பம் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த இன்னோவா காரின் மீது விழுந்ததால் கார் கண்ணாடிகள் உடைந்து உருக்குலைந்தது. இதையடுத்து கார் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. நல்வாய்ப்பாக அந்த காரில் யாரும் இல்லாத நிலையில், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 100 அடி கொடிக் கம்பம் சாயும் போது அருகிலிருந்த தவெகவினர் சிதறி ஓடியதால் தப்பித்துக் கொண்டனர்.
சற்றுமுன் வந்த தகவலின்படி மீண்டும் கொடிக்கம்பம் அமைக்கும் பணி இரவோடு இரவாக நடைபெற்று வருவதாகவும் அந்த இடத்தில் நிரந்தரமாக கொடி கம்பம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடந்த இடத்தில் 5 ஆண்டுகள் தவெக கொடி பறக்கும் வகையில் கம்பம் நடப்பட்டது. இதற்காக விவசாயி மணி என்பவரிடம் முன் தொகையாக ரூ.50,000 செலுத்தி ஒப்பந்தம் போடப்பட்டு மாதம் மாதம் ரூ.5000 தவெகவினரால் வழங்கப்படுகிறது. அதேபோன்று பராமத்தியில் கொடி கம்பம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
.png)