1. Home
  2. தமிழ்நாடு

கடலுக்குள் உற்சாகமாய் சென்ற மீனவர்கள் !

1

வங்கக்கடலின் கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த சமயத்தில் விசைப்படகுகள் மற்றும் ஃபைபர் படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதில்லை. கட்டுமரங்களில் கரையில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டும் பயணிக்கும் மீனவர்கள், அங்கு கிடைக்கும் மீன்களை பிடித்து வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக மீன்களின் விலை இந்த காலகட்டத்தில் கடுமையாக உயரும். தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கடற்கரையோர பகுதிகளில் இந்த மீன்பிடி தடைக்காலத்தின் போது மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனிடையே நேற்று இரவுடன் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக நேற்று இரவு கிளம்பிச் சென்றனர். குறிப்பாக ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்கும் விசைப்படகு மீனவர்கள் 10 நாட்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

இதே போல் ஃபைபர் படகு மீனவர்களும், கடலுக்கு மீன் பிடிக்க நேற்று இரவு கிளம்பி உள்ளனர். இதனால் இன்று கடற்கரையோர சந்தைகளில் மீன்களின் வரத்து கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு கடலுக்கு செல்வதால் அதிகளவிலான மீன்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like