ஆவடி அருகே தின்னர் ஆலையில் தீ விபத்து..!

திருமுல்லைவாயிலில் தின்னர் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அருகிலேயே குடியிருப்பு பகுதிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளன.
இந்த ஆலையில் இன்று எதிர்பாராதவிதமாக திடிரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ கொளுந்து விட்டு எரிவதால் அப்பகுதியில் பதற்றம் உருவாகியுள்ளது.
ஆலையில் பற்றிய தீ அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்திலும் பரவியது. பள்ளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள் தீக்கிரையானது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் உள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
கரும்புகையுடன் தீ கொளுந்துவிட்டு எரிவதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பயங்கர தீ விபத்தால் மக்களுக்கு சுவாசக் கோளாறு, கண் எரிச்சல் ஆகியவை ஏற்பட்டுள்ளது.
தின்னர் தயாரிப்பு ஆலையில் நிகழ்ந்த இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.