திண்டுக்கல் அருகே பந்தல் அலங்கார குடோனில் பயங்கர தீ விபத்து!

சின்னாளப்பட்டியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் கரட்டழகன்பட்டியில் பந்தல் அலங்கார பொருட்கள் குடோன் வைத்துள்ளார்.
இங்குத் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்குப் பந்தல் அமைக்கும் பொருட்கள், மேடை அலங்கார பொருட்கள் ஆகியவை வைக்கப்பட்டு இருந்தன.
இன்று அதிகாலை அந்தக் கடையிலிருந்து திடீரெனப் புகை மூட்டம் வந்தது. பின்னர் புகை அதிகரித்து தீ பிடித்து எரியத் தொடங்கியது.
இதைப் பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் திண்டுக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நிலைய அலுவலர் தலைமையில் அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் குடோனில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர்.
இருந்தபோதும் உள்ளே இருந்த பெரும்பாலான பொருட்கள் தீயில் எரிந்து கருகியது.
இதுகுறித்து அம்பாத்துரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீ விபத்துக்கான காரணம்குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாகத் தெரிய வந்துள்ளது.
உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் மற்ற கடைகளுக்குப் பரவுவது தவிர்க்கப்பட்டதுடன் பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.