சண்டை ஓவர்..! அன்புமணிக்கு புதிய பொறுப்பு கொடுத்த ராமதாஸ்..!

பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாடு 12 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே 11 ஆம் தேதி மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் நடைபெறுகிறது. இதற்கான பந்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. இந்நிலையில் சித்திரை முழு நிலவு மாநாட்டு குழு தலைவராக அன்புமணியை நியமித்துள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், 1988-ஆம் ஆண்டில் தான் முதன் முறையாக வன்னியர் சங்கத்தின் சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். அந்த மாநாட்டை முன்னின்று நடத்தியவர் பு.தா. இளங்கோவன். அவருக்குப் பிறகு குருபரன், பு.தா.அருள்மொழி ஆகியோர் சித்திரை முழுநிலவு மாநாடுகளை சிறப்பாக நடத்தியதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 2000-ஆம் ஆண்டில் நடைபெற்ற சித்திரை முழுநிலவு மாநாட்டை மாவீரன் குரு தலைமையேற்று நடத்தினார் என்றும் அதன்பின் தேர்தல் ஆண்டுகள் தவிர, 2013 ஆம் ஆண்டு வரை 10 சித்திரை முழுநிலவு விழாக்களை மாவீரன் குரு தான் நடத்தினார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் 1988-ஆம் ஆண்டு முதல் 2013 வரை நடைபெற்ற 20 சித்திரை முழுநிலவு மாநாடுகளில் சரிபாதி மாநாடுகளை தலைமையேற்று நடத்திய பெருமை அவருக்கு உண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின் 12 ஆண்டுகளுக்குப் பிறகு 2025-ஆம் ஆண்டில் நடைபெறும் சித்திரை முழுநிலவு மாநாட்டுக்கான பணிகளை மேற்கொள்ளும் மாநாட்டுக்குழு தலைவராக மருத்துவர் அன்புமணியை நியமித்திருப்பதாகவும் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இடையே வெடித்த மோதலுக்கு பிறகு தற்போது முதல் முறையாக அன்புமணி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் ராமதாஸ்.
அதிலும் அன்புமணியை சித்திரை முழுநிலவு மாநாட்டுக் குழு தலைவராக நியமித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதன்மூலம் அப்பாவுக்கும் மகனுக்கும் ஏற்பட்ட பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாக பாமக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.