பால் தாக்கரே வாழ்க்கை வரலாறு படத்தை தயாரிக்கும் பெண் தயாரிப்பாளர் அதிரடி கைது!!
படிக்காமலேயே முனைவர் பட்டத்தை போலியாக பெற்ற சினிமா பெண் தயாரிப்பாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையை சேர்ந்தவர் சுவப்னா பட்கர் (39). சினிமா தயாரிப்பாளரான இவர், ராயல் மராத்தா என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தின் மூலம் மராத்தியில் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். ’பால்காடு’ என்ற படத்தை தயாரித்தார். இது, மறைந்த சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் வாழ்க்கை வரலாற்று கதையாகும். இதையடுத்து இவர் அங்கு மிகவும் பிரபலமானார்.
இந்த நிலையில் இவர் மகாராஷ்டிரா போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது கடந்த 2016ஆம் ஆண்டு முதல் பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில், மனநல பயிற்சியாளராக இருந்து வருகிறார். இதற்கான முனைவர் (பி.எச்.டி). பட்டம் பெற்றிருப்பதாக சான்றிதழ் சமர்பித்திருந்தார்.
ஆனால், சமூக ஆர்வலர் குர்தீப் கவுர்சிங் என்பவர் கடந்த மாதம் 26 ஆம் தேதி மும்பை பாந்த்ரா போலீசில் இவர் மீது புகார் அளித்தார். அதில், தயாரிப்பாளர் சுவப்னா பட்கர், கான்பூரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து போலியாக முனைவர் பட்டம் பெற்று, மருத்துவமனையில் கவுரவ ஆலோசகராக இருந்து வருகிறார் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அது உண்மை என்று தெரியவந்ததை அடுத்து, அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். பிரபல பெண் திரைப்பட தயாரிப்பாளர் கைது செய்யப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in