பெண் கடத்தல் வழக்கு.. 26 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது !
![பெண் கடத்தல் வழக்கு.. 26 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது !](https://newstm.in/static/c1e/client/106785/migrated/4e00fdff9c19fd6a00b58778b8c48f6f.webp?width=836&height=470&resizemode=4)
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூரில் 1989ஆம் ஆண்டு ஒரு கும்பல் இளம்பெண் ஒருவரை கடத்திச் செல்ல முயன்றது.
இந்த கடத்தல் வழக்கில் விசாரணை நடத்திய திருநள்ளார் போலீசார் 17 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் இதில் 16 பேரை போலீசார் கைது செய்த நிலையில், காரைக்கால் நீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெற்று வந்தது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சந்திரசேகர் என்பவர் கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் தலைமறைவாகி விட்டார். அதைத் தொடர்ந்து சந்திரசேகரை தலைமறைவு குற்றவாளியாக காரைக்கால் நீதிமன்றம் அறிவித்து அதன்பேரில் அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சந்திரசேகர் சிதம்பரத்தில் தங்கியிருப்பதாக திருநள்ளாறு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சந்திரசேகரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அப்போது 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.
newstm.in