இப்போதைக்கு கடனை கட்ட முடியாது சாமி! நீதி மன்றத்தில் வழக்கு போட்ட விவசாயிகள் !

நீலகிரி மாவட்டத்தில் மலர் விவசாயிகளின் கடன்களை வசூலிக்கும் வங்கிகளின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நீலகிரி மாவட்ட மலர் வளர்ப்பு சிறு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் என்.விஸ்வநாதன் தொடர்ந்துள்ள பொது நல வழக்கில், கடந்த 2003-ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது நீலகிரி மாவட்டத்தில் தேயிலை உற்பத்தி துறையும் வீழ்ச்சி அடைந்ததால், மலர் வளர்ப்பு விவசாயத்திற்கு விவசாயிகள் மாற தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.
அவ்வாறு மாறும்போது, நறுமண மலர்கள் வளர்ப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்க 7 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவாகும் என திட்டமிடப்பட்டது. இதற்காக, பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் கனரா வங்கிகளில் சுமார் 200-க்கும் அகமான விவசாயிகள் கடன் பெற்று மலர் விவசாயம் செய்தனர். ஆனால், 2008 -ம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் வீசிய புயல் காரணமாக மலர் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டு, வேலையும், வருமானமும் இழந்துள்ளோம்.
ஆனால் கடன் தொகையை வசூலிக்க வங்கிகள் கடும் நடவடிக்கை எடுத்ததால், இது தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டு முதல் மாவட்ட நிர்வாகத்திடமும், தமிழக அரசிடமும் பல மனுக்களை கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த 2019-ம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அமைத்த கூட்டுக்குழுவின் மூலம் எடுக்கப்பட்ட முடிவில், அசல் தொகை 7 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயில், பாதி தொகையை செலுத்துவது என்றும், வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் கடன் தொகையை வசூலிக்கும் நடவடிக்கைகளை வங்கிகள் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. எனவே, வங்கிகளின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும், மேலும், மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் 28-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.