1. Home
  2. தமிழ்நாடு

விவசாயிகள் கவலை..! டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி கடும் பாதிப்பு..!

1

டெல்டாவின் கடைமடை மாவட்டங்களான திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறையில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் அளவுக்கு பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் கோடைகாலப் பயிராக பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்படுவது வழக்கம். குறைந்தளவு தண்ணீர் தேவைப்படும் பருத்தி சாகுபடிக்கு, ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் செலவாகிறது. ஆனால், ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். இதனால் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஆர்வம் காட்டுவதால், டெல்டா மாவட்டங்களில் அண்மைக் காலமாக அதன் சாகுபடி பரப்பளவு அதிகரித்து காணப்படுகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், வலங்கைமான், நன்னிலம், நீடாமங்கலம், குடவாசல், கொரடாச்சேரி, மன்னார்குடி பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் திருமருகல், திருக்குவளை, கீழ்வேளூர் பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரிலும் பருத்தி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏப்ரல் மாத இறுதியிலும், மே மாத தொடக்கத்திலும் டெல்டா மாவட்டங்களில் நிலவிய கடும் வெப்பத்தால், பருத்தி, முன்பட்ட குறுவை நெற் பயிர் சாகுபடிகள் போதிய தண்ணீரின்றி கருகும் நிலை ஏற்பட்டது. தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்குமாறு விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாள்களாக திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், வயல்களிலும் அதிகளவில் மழைநீர் தேங்கியுள்ளது.குறைந்தளவு தண்ணீர் மட்டும் தேவைப்படும் பருத்தி வயல்களில் அதிக மழைநீர் தேங்கியுள்ளது. மூன்று நாள்களாக மழை நீரில் பருத்தி செடிகள் இருப்பதால், அதன் வேர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். 

நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தனுஷ்கோடி தெரிவிக்கையில்., நாகை மாவட்டத்தில் பருத்தி வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிய வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை தொடர்ந்தால் பருத்தி சாகுபடி அதிக பாதிப்புக்குள்ளாகும். வேளாண் அதிகாரிகளை நேரடியாக பருத்தி வயல்களை ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.இதே தகவல்களை மயிலாடுதுறை மாவட்ட வேளாண் இணை இயக்குநரும், திருவாரூர் மாவட்ட வேளாண் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் பாதிப்புக்குள்ளான பருத்தி சாகுபடியின் மதிப்பு சுமார் ரூ.25 கோடி. மழை தொடர்ந்தால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

Trending News

Latest News

You May Like