கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம்.. மட்டன் சமைத்து சாப்பிட்டுவிட்டு கொள்ளையடித்த திருடர்கள் !
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய கொள்ளையர்கள் அங்கேயே மட்டன் சமைத்து சாப்பிட்டுவிட்டுச் சென்ற சம்பவம் ஜார்க்கண்டில் நிகழ்ந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜக்சாலை நகர் பகுதியில் வசிக்கும் கண்காணிப்பு பணியாளர் ஒருவருக்கு கடந்த ஜூலை 8-ஆம் தேதி கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது மனைவி பிள்ளைகளுடன் தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும் அவரது வீட்டிற்கும் ஜார்க்கண்ட் சுகாதாரத்துறையினர் சீல் வைத்துவிட்டனர்.
இந்நிலையில் அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம்பக்கத்தினர் மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதனால் பூட்டியிருந்த வீட்டைச் சென்று ஒருமுறை பார்க்குமாறு தனது சகோதரரிடம் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் கூறியிருக்கிறார்.
சகோதரர் சென்று பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை, பணத்தை சிலர் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
கதவை கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு உடைத்துள்ள அந்த நபர்கள், வீட்டிற்குள் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒன்றரை சவரன் நகையை திருடிச் சென்றுள்ளனர்.
அப்போது வீட்டில் சாப்பாடு, சப்பாத்தி மற்றும் சோறு உள்ளிட்டவற்றை சமைத்து சாப்பிட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், அப்பகுதியில் கூடுதலாக போலீஸாரை கண்காணிப்பு பணியில் அமர்த்தியுள்ளனர்.
newstm.in