தொழிற்சாலைகள் மின் அளவீட்டை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பலாம்..! மின்வாரியம் அறிவிப்பு..
தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மின் இணைப்பின் மின் அளவீட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தாழ்வழுத்த தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் செலுத்திய மின் கட்டணத்தையே மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் செலுத்தலாம் எனக் கூறப்பட்டது.
ஆனால் இந்தக் கட்டணமானது, தற்போதைய மின் நுகர்வை விட கூடுதலாக இருப்பதாக புகார் எழுந்தது. அதாவது ஏப்ரல், மே காலக்கட்டத்தில் தொழிற்சாலைகள் இயங்கவில்லை என்பதால் கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடும் என கூறப்பட்டது.
இதனையடுத்து மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மின் இணைப்பின் மின் அளவீட்டை மீட்டரில் புகைப்படம் எடுத்து அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் மின் அளவீட்டை இ-மெயில், எஸ்.எம்.எஸ் ஆகியவற்றின் மூலமாகவும் அனுப்பலாம் எனவு கூறப்பட்டுள்ளது.
மின் அளவீடு பெறப்பட்டவுடன் கட்டணம் திருத்தியமைக்கப்பட்டு நுகர்வோருக்கு அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அந்தந்த பகுதி உதவி பொறியாளர், இளநிலை பொறியாளரின் அலுவலக கைப்பேசி எண், இ- மெயில் உள்ளிட்ட விவரத்தை www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம் என மின்வாரியம் கூறியுள்ளது.
newstm.in