95 ஆசிரியர்களுக்கு 2023 வரை பணி நீட்டிப்பு! அரசு அதிரடி உத்தரவு!!
தமிழக ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளை, உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு அங்கு 95 பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2020ம் ஆண்டு வரை இருந்த பணி ஆணையை மேலும் 2023ம் ஆண்டு வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது;-
2016 – 2017ம் கல்வி ஆண்டில், அரசு நடத்தும் 19 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக அரசு தரம் உயர்த்தியது. அவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தலா 5 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 95 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிகள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டு அரசு ஆணை வெளியிட்டது. இந்த பணிகளுக்கு 14.1.2018 ம் ஆண்டு முதல் 31.12.2020 வரை மூன்று ஆண்டுகளுக்கு பணிக்காலம் வழங்கி ஆணை வெளியிடப்பட்டது.
இந்த 95 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிக்காலம் கடந்த 2020 டிசம்பர் 31, உடன் முடிவடைகிறது. இதனால் இவர்களுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்க பள்ளிக்கல்வி இயக்குனர் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். பள்ளிக்கல்வி இயக்குனரின் கோரிக்கையை பரிசீலித்து தமிழக அரசு 95 பட்டதாரி ஆசிரியர்களின் பணி காலத்தை 1.1.2021 முதல் 31.12.2023 ம் வரை மூன்று ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்குவதாக அரசு ஆணையிட்டுள்ளது.
தரம் உயர்த்தப்பட்ட 19 பள்ளிகளின் 95 பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதிய ஊதிய விகிதம் ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரை நிர்ணையிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இவர்களுக்கான ஊதிய செலவினத்தை அனைவர்க்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ் பள்ளிகளின் நிலையினை உயர்த்துதல் என்ற பிரிவில் பற்று வைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
newstm.in