1. Home
  2. தமிழ்நாடு

மத்திய உள்துறை அமைச்சர் முன்பு இபிஎஸ் ஒரு வார்த்தை கூட பேசலியே.. அந்த செயல் திட்டம் இதுதானா? - ரகுபதி காட்டம்!

1

அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து அதிமுக - பாஜக கூட்டணி அறிவித்தனர். இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “2 ரெய்டுகளுக்கே அதிமுகவை அடமானம் வைத்துள்ளவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கப் போகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் கூட்டணி அறிவிப்பு இடிபோல் வந்து ஸ்டாலினுக்கு இறங்கியுள்ளது என்றும், பீதியின் உச்சத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக சட்ட அமைச்சர் ரகுபதி வெளியிட்ட அறிக்கையில், “இரண்டு ரெய்டுகளுக்கு அரண்டு போய் அமித்ஷா முன்னிலையில் ஒருவார்த்தை கூட பேசாமல் தலையாட்டி பொம்மை போல அமர்ந்து கூட்டணியை உறுதி செய்தார் எடப்பாடி பழனிசாமி. இதனை முதல்வர் சுட்டிக்காட்டிவிட்டார் என்றவுடன் ரோஷம் வாந்தவரைப் போல வீண் அவதூறுகளை மட்டும் அள்ளிவிட்ட்டுள்ளார்” என்று குற்றம்சாட்டினார்.

ஜிஎஸ்டி வரியை ஏற்றது, உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டு மின்கட்டண நிர்ணய உரிமையை விட்டு கொடுத்தது, சிஏஏவை ஆதரித்து முஸ்லீம் மக்களின் முதுகில் குத்தியது இப்படி தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய பாஜகவிடம் விட்டுக்கொடுத்தது அடிமை அதிமுக ஆட்சியில் தான் என்றும் ரகுபதி விமர்சனம் செய்தார்.

அதோடு அதிமுக ஆட்சியில் தான் நீட் நுழைவு தேர்வு தமிழ்நாட்டில் திணிக்கப்பட்டது என்ற அவர், “தன் பதவியைக் காப்பாற்ற பாஜக கூட்டணியில் ஒட்டிக்கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்தவர் இபிஎஸ். இப்போதாவது நீட் விலக்கு அளித்தால் கூட்டணி வைக்கிறேன் என்றாவது பாஜக அரசிடம் வலியுறுத்தினாரா அதுவும் இல்லை. எந்த வித நிபந்தனையும் பழனிசாமி விதிக்கவில்லை என்று அமித்ஷா சொல்லிவிட்டார்” என்றும் குறிப்பிட்டார்.

இப்படி தமிழ்நாட்டு நலனுக்கான எந்தவித உறுதியையும் பாஜகவிடம் கேட்காமல் அடிமை சாசனம் எழுதி கொடுப்பது போல கூட்டணிக்கு சரி என தலையாட்டி பொம்மையாய் பேச்சின்றி தலையைமட்டும் ஆட்டி கூட்டணியை உறுதி செய்துள்ளார் பழனிசாமி என்றும் அவர் தெரிவித்தார்.

ஏதோ குறைந்த பட்ச செயல்திட்டம் உள்ளது என்கிறார். அந்த ரகசியத்தை எப்போது சொல்வார்கள் தேர்தல் முடிந்த பின்னா என்று கேள்வி எழுப்பிய ரகுபதி, “உங்களது அந்த செயல்திட்டம் எல்லாம் இனி அமலாக்கத் துறை அதிமுகவினர் வீட்டுக்கதவை தட்டக் கூடாது என்பதுதான் துரோகி அதிமுகவும், விரோதி பாஜகவும் சேர்ந்த கூட்டணியை வரும் தேர்தலில் மக்கள் விரட்டி அடிப்பார்கள்” என்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

Trending News

Latest News

You May Like