1. Home
  2. தமிழ்நாடு

பொறுத்தது போதும்..! அ.இ.அ.தி.மு.க.வினருக்கு வி.கே. சசிகலா அழைப்பு..!

1

வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

எம்.ஜி.ஆர். ஆரம்பித்த இயக்கம் அ.தி.மு.க. அதன் பின்னர் ஜெயலலிதாவால் கஷ்டப்பட்டு வளர்க்கப்பட்ட இயக்கம். அதன் வளர்ச்சியில் எனது தன்னலமற்ற பங்கும் அடங்கியிருப்பதால் இந்த இயக்கம் எந்நாளும் தோல்வி அடைந்து விடக்கூடாது என்ற ஒரே எண்ணத்தில் தான் நான் இத்தனை காலம் பொறுமையாக இருந்தேன். கட்சியை ஒருங்கிணைக்க பெரும் முயற்சிகள் மேற்கொண்டேன். ஒரு சிலரின் தனிப்பட்ட சொந்த விருப்பு, வெறுப்புகளுக்காக இயக்கம் அழிவதை இனியும் என்னால் வேடிக்கை பார்க்கமுடியாது. 

இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்து,  நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சில இடங்களில் நான்காவது இடத்திற்கும். மூன்றாவது இடத்திற்கும் தள்ளப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.  இதற்காகவா இருபெரும் தலைவர்களும் இந்த இயக்கத்தின் முன்னேற்றத்திற்காக தங்கள் இறுதிமூச்சு உள்ள வரை அயராது பாடுபட்டார்கள்? இது அவர்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம். 

 இந்த அவல நிலை எதனால் ஏற்பட்டது? இதற்கு யார் காரணம்? என்பதை சற்று சிந்தித்து பாருங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வலிமையான இயக்கமாக நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து இருந்தால்  இன்றைக்கு அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்று இருக்கும்.   இதுபோன்ற தொடர் தோல்விகளை  அ.தி.மு.க. எந்த நேரத்திலும் கண்டதில்லை. தனி ஆவர்த்தனம் செய்து கொண்டு இருந்தால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. யாராக இருந்தாலும் சுயமாக சிந்தித்து அதில் வெற்றி பெற வேண்டும் இல்லையேல் அடுத்தவர்கள் சொல்வதையாவது கேட்டு தவறுகளை திருத்திக் கொள்ளவேண்டும். அனைத்தையும் இழந்துவிட்டு நீலிக்கண்ணீர் வடிப்பதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை. 

இந்த யதார்த்தத்தை உணர்ந்து கட்சியை ஒருங்கிணைக்க அனைவரும் வர வேண்டும்.  இந்த இயக்கம் இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் மக்களுக்காகவே இயங்கும் என்று ஜெயலலிதா குளுரைத்ததை அனைவரும் மனதில் வைத்து ஒன்றுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.   தமிழக மக்களும் இந்த இயக்கம் ஒன்றுபடவேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஜெயலலிதா ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்தில் ஏழை, எளிய சாமானிய மக்கள் நிம்மதியாக வாழ முடியும். இனியும் நான் பொறுமையாக இருந்தால் அது எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவிற்கும், கோடான கோடி தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் செய்யும் மிக பெரிய துரோகமாகிவிடும். எனவே, இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். 

அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் தங்களது சொந்த விருப்பு வெறுப்புகளை களைந்து, தமிழக மக்களையும், இந்த இயக்கத்தின் உன்னத தொண்டர்களின் உணர்வையும், உயர்வையும் எண்ணி அனைவரும் வாருங்கள். உங்கள் அனைவரையும் எந்தவித வேறுபாடும் இல்லாமல் அரவணைத்து ஓர் அணியில் நின்று ஒற்றுமையோடு இணைந்து செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்,  இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். 

Trending News

Latest News

You May Like