5 லட்சம் பேருக்கு வேலை.. துணை முதல்வர் அதிரடி அறிவிப்பு!

தெலங்கானா தனி மாநிலமாக பிரிந்த பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சி பொறுப்பை ஏற்றது.
ஆட்சி பொறுப்பை ஏற்றதுமுதலே மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் அம்மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் அம்மாநில இளைஞர்களுக்கு நல்ல செய்தியை அறிவித்துள்ளது ரேவந்த் ரெட்டி தலைமையிலான அரசு. தெலங்கானா துணை முதல்வர் பட்டி விக்ரமார்க்க மல்லு, புப்பலகுடாவில் 450 ஏக்கர் பரப்பளவில் ஒரு பெரிய தகவல் தொழில்நுட்ப அறிவு மையத்தை அதாவது IT knowledge Hub ஒன்றை நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த லட்சியத் திட்டத்தின் மூலம் நகரின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்தும் என்றும் முதல் கட்டமாக சுமார் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார். துணை முதல்வர் மற்றும் பிற அமைச்சரவை அமைச்சர்கள் தலைமையில் இன்று உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்த முடிவு மறுஆய்வு செய்யப்பட்டது.
ஐடி மையத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள் மற்றும் சிறப்பு காவல் சங்கங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளும் அடங்கும் என கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு கணிசமான வேலை வாய்ப்புகளை உருவாக்கப்படுவதோடு உள்ளூர் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.