வீடு, வாகனங்களுக்கான இஎம்ஐ உயர்கிறது: எஸ்பிஐ..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/a34f29a8f311662252f01a59ea6b82a2.jpg?width=836&height=470&resizemode=4)
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சேவைகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீண்ட கால மற்றும் குறுகிய கால கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விவசாய கடன், கல்விக் கடன், வீட்டுக் கடன், வாகன கடன் உள்ளிட்டவை அடங்கும். இதனிடையே கடந்த 15ம் தேதி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பில், நிதி அடிப்படையிலான கடன் விகிதத்தின் விளிம்பு செலவான எம்சிஎல்ஆர் என்ற புள்ளிகளை 5 முதல் 10 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக நீண்ட கால கடன்களான வாகனம் மற்றும் வீட்டுக் கடன் ஆகியவற்றின் இஎம்ஐ அதிகரிப்பதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. கடந்த டிசம்பர் 8ம் தேதி ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவீதமாக நீடிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் இந்த முடிவு வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிதாக கடன் கோரி விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த புள்ளிகள் காரணமாக மாதாமாதம் செலுத்தும் இஎம்ஐ தொகை அதிகரிக்கும் என தெரிகிறது. இருப்பினும் இந்த புள்ளிகள் அவ்வப்போது மாற்றி அமைக்கப்படுவதால், அவை மீண்டும் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் நிதி ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த புதிய மாற்றம் ஏற்கெனவே கடன் வாங்கியவர்களுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.