விழுப்புரம் சம்பவத்தின் எதிரொலி - லாட்டரி விற்றால் குண்டர் சட்டத்தில் கைது..!
விழுப்புரத்தில் உள்ள சித்தேரிக்கரைப் பகுதியைச் சேர்ந்த நகை செய்யும் தொழிலாளி அருண். இவருக்கு சிவகாமி என்ற மனைவியும் பிரியதர்ஷினி, யுபஸ்ரீ, பாரதி என ஐந்து முதல் ஒரு வயது வரை 3 குழந்தைகளும் இருந்தனர். சொந்த வீடு, சொந்த தொழில் என நிம்மதியான வாழ்க்கை நடத்தி வந்தார் அருண். ஆனால், அவர் நடத்தி வந்த நகைத் தொழில் நலிவடைந்ததால் மூன்று நம்பர் லாட்டரிச் சீட்டுகளை வாங்க ஆரம்பித்துள்ளார். அதனை நம்பி லாட்டரிச் சீட்டுகளை வாங்கி கடனாளியான அருண் தனது 3 குழந்தைகளுக்கும் நகை செய்ய பயன்படுத்தும் சயனைடு விஷத்தை கொடுத்து கொன்றிருக்கிறார்.
அதன்பின் பதிவு செய்த வீடியோவில் தானும், மனைவியும் தற்கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார். விஷம் சாப்பிடும் முன்பாக தான் பதிவு செய்த வீடியோவை வாட்ஸ் அப் மூலம் தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார் அருண். அந்த வீடியோவை பார்த்தால் கண்களில் தானாக கண்ணீர் வரும் அளவுக்கு உள்ளது. அருண் அனுப்பிய வீடியோ பார்த்து பதறிப்போன நண்பர்கள் அருணின் வீட்டைத் தேடி ஓடோடி வந்துள்ளனர். பூட்டப்பட்டிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்றபோது அங்கே அருணும், அவரது மனைவியும், 3 குழந்தைகளும் சடலமாக கிடந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் 5 பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
3 நம்பர் லாட்டரிச் சீட்டால் ஒரு குடும்பமே உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து 3 நம்பர் லாட்டரி விற்பனை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். லாட்டரி தொழிலில் ஈடுபடும் அனைவரையும் கைது செய்வோம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் 3 நம்பர் லாட்டரி தொழிலில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
newstm.in