1. Home
  2. தமிழ்நாடு

தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

1

சென்னை ஐஐடி மாணவி ஒருவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். வளாகத்திற்கு வெளியே சென்று மாணவி தேநீர் குடிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள பேக்கரியில் பணியாற்றும் ஊழியர் ஸ்ரீராம் (30) மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மாணவி கொடுத்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து குற்றம் சாட்டப்பட்ட உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீராமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக மெட்ராஸ் ஐஐடி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை ஐஐடி, “ஜனவரி 14 (நேற்று) மாலை 5.30 மணியளவில் வேளச்சேரி - தரமணி சாலையில் உள்ள தேனீர் கடையில் ஐஐடி ஆராய்ச்சி மாணவி ஒருவர் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அந்த பெண்ணின் ஆண் நண்பர்கள், தொல்லை கொடுத்த நபரை காவல்துறை வசம் ஒப்படைத்தனர்.

ஐஐடி வளாகத்திற்கு வெளியே உள்ள தேனீர் கடையில் சம்பவம் நடைபெற்றுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு சென்னை ஐஐடியுடன் எந்த தொடர்பும் இல்லை. ஐஐடி வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. வளாகத்திற்குள் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவ - மாணவிகள் வளாகத்தை விட்டு வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஐஐடி நிர்வாகத்துக்கும், தமிழ்நாடு அரசுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஐஐடி கேன்டீனில் தேநீர் குடிக்கச் சென்ற மாணவி, பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யாத சென்னை ஐஐடி நிர்வாகத்திற்கும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சர்வசாதாரணமாக நடக்கும் அச்ச நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளிய மு.க.ஸ்டாலின் மாடல் அரசுக்கும் எனது கடும் கண்டனம்.

பெண்கள் கல்வியே சமூகத்தை உயர்த்தும்; அவர்கள் அதைப் பெறுவதற்கான பாதுகாப்பான சூழலை அமைத்திட வேண்டியது தங்கள் தலையாயக் கடமை என்பதை மத்திய மாநில அரசுகளும்; கல்லூரி நிர்வாகங்களும் உணரவேண்டும்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவன் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன்; இனியேனும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை தமிழ்நாட்டில் அமைத்திடுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like